சிஎன்ஜி பைக் என்று எல்லாரும் போட்டி போட்டு வாங்குறாங்க! பஜாஜ் இந்த சம்பவத்துக்கு என்ன சொல்ல போகுது?
சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சுருக்கமாக சிஎன்ஜி என அழைக்கப்படும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை வரிவாயு குறைந்த விலையில் கிடைப்பதால், மக்கள் நிறைய பேர் சிஎன்ஜி வாகனங்களை விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர். இதில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாதத்தில் ஃப்ரீடம் 125 (freedom 125) என்கிற சிஎன்ஜி பைக்கை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் ஒன்றிற்கு சிஎன்ஜி நிரப்பும்போது எதிர்பாராத விதமாக ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. என்ன நடந்தது வாருங்கள் அதனை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் முழுவதுமாக மாறுவதற்கு முன் வேறு சில மாற்று எரிபொருள் வாகனங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்தியாவில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாகவே, சமீப காலத்தில் அதிகளவில் சிஎன்ஜி வாகனங்கள் மார்க்கெட்டிற்கு வர துவங்கியுள்ளன. தற்போதைக்கு பெரும்பாலான சிஎன்ஜி வாகனங்கள் 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாக்களாகவும், கார்களாகவும் தான் உள்ளன. பைக்கை சிஎன்ஜி-இல் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் பஜாஜ் ஆட்டோ ஆகும். இதன் காரணமாகவே, பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் நாடு முழுவதும் கவனத்தை பெற்றது.
இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக ஃப்ரீடம் 125 விளங்குகிறது. பொதுவாகவே, எந்தவொரு முதல் முயற்சியை சுற்றிலும் சந்தேகங்களும் இருக்கும். அந்த வகையில், பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் பாதுகாப்பு தரம் குறித்தும் பலர் பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்தனர். அத்தகையவர்களுக்கு மேலும் தீனி போடும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சிஎன்ஜி நிரப்பும் நிலையத்திற்கு வந்த பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் ஒன்றிற்கு உழியர் ஒருவர் சிஎன்ஜி நிரப்ப முயல்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக பைக்கில் சிஎன்ஜி நிரப்பும் குழாயை பொருத்துவதற்கு முன் குழாயில் இருந்து வாயு வேகமாக பீய்ச்சி அடித்து சம்பந்தப்பட்ட ஊழியரை நிலைக்குலைய வைத்துள்ளது.
பைக்கில் சிஎன்ஜி குழாயை மாட்டுவதற்கு முன்னரே ஊழியர் தவறுதலாக சிறிது வாயுவை திறந்துவிட்டார். இதனால், குழாய் சரியாக பைக்குடன் பொருந்தவில்லை. அந்த நேரத்தில் முழு வீச்சில் வாயுவை ஊழியர் திறந்துவிட்டதும், பைக்கில் இருந்து குழாய் பிடிங்கிக் கொண்டது. அதிக அழுத்தத்தில் குழாயில் இருந்து சிஎன்ஜி வெளியே வந்ததால், பிடிங்கி கொண்ட பின் குழாய் தாறுமாறாக சுற்றுவதை வீடியோவில் காணலாம்.

இதனை கண்ட ஃப்ரீடம் 125 பைக் ஓட்டுனர் மற்றும் அவருடன் வந்தவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டனர். ஆனால், சம்பந்தப்பட்ட ஊழியர் அதனை கட்டுப்படுத்த முயன்ற போது, குழாயின் முனைப்பகுதி அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் நிலைக்குலைந்து போனவர், சுயநினைவின்றி தரையில் விழும் பரிதாபமான காட்சிகளை வீடியோவில் காண முடிகிறது.
சுற்றி இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே கொஞ்சம் நேரத்திற்கு புரியவில்லை. இது முழுக்க முழுக்க சிஎன்ஜி நிலைய ஊழியரின் தவறு என்றும், அவர் சிஎன்ஜி குழாயை பைக்குடன் சரியாக பொருத்தவில்லை என்றும் இந்த நிகழ்வுக்கு சிலர் குற்றச்சாட்டும் நிலையில், அதேநேரம் சிலர் ஃப்ரீடம் 125 பைக்குகளில் இவ்வாறு சிஎன்ஜி குழாயை பொருத்துவதில் சிலமுறை பிரச்சனை ஏற்படுகிறது என தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் முதல் சிஎன்ஜி பைக் என சொன்னாலும், இப்போதும் சில பெட்ரோல் பங்குகளில் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கிற்கு சிஎன்ஜி-ஐ நிரப்ப சில உழியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில், சிஎன்ஜி குழாயை பைக்கில் எவ்வாறு சரியாக பொருத்துவது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு இன்னும் சில ஊழியர்கள் பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கிற்கு சிஎன்ஜி நிரப்ப தயக்கம் காட்டக்கூடும்.


Click it and Unblock the Notifications









