சிஎன்ஜி காருக்கு ரன்னிங் காஸ்ட் அதிகமாகுதா? பயப்பட வேண்டாம்... மத்திய அரசு எடுக்கும் புதிய அதிரடி முடிவு!!
புதிய புதிய சிஎன்ஜி கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக விற்பனைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், சிஎன்ஜி வாகன ஓட்டிகளுக்கு குஷியான செய்தியாக, சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
பெட்ரோல் & டீசல்கள் திரவம் என்பதால் லிட்டர்களில் கணக்கிடப்படும். அதுவே சுருக்கமாக சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு ஆனது கிலோ கிராமில் அளவிடப்படுகிறது. அதாவது, இயற்கை எரிவாயு அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு கிலோ கணக்கில் வழங்கப்படும். இதனால் சிஎன்ஜி வாகனங்களை வைத்திருப்போர் தங்களது வாகனத்தின் மைலேஜை கிலோகிராமில் தான் தெரிவிப்பது வழக்கம்.

இந்த சிஎன்ஜி எரிபொருளின் விலை விரைவில் குறிப்பிடத்தக்க அளவில் குறைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மத்திய அமைச்சகம் இயற்கை எரிவாயுக்கான விலையை நிர்ணயம் செய்வதில் பின்பற்றும் ஃபார்முலாவை திருத்தி கொள்ள உள்ளது. இதனால் சிஎன்ஜி -இன் விலை நம் நாட்டில் தற்போதைய விலையை காட்டிலும் 10% வரையில் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்சமயம், தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ இயற்கை எரிவாயுவின் விலை ரூ.79.56 ஆகவும், மும்பையில் ரூ.87 ஆகவும் உள்ளது. இதில் டெல்லி விலை மிக விரைவில் ரூ.73.59 ஆகவும், மும்பை விலை ரூ.79 ஆகவும் குறைக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் & டீசல் வாகனங்களுக்கு பதிலாக சிஎன்ஜி வாகனங்களுக்கு சென்ற உரிமையாளர்களுக்கு இந்த குறைப்பு நிச்சயமாக ஆறுதலாக இருக்கும். ஏனெனில், பொதுவாகவே பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் சிஎன்ஜி வாகனங்களின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த கூடுதல் விலையை எரிபொருள் செலவில் பெற்றுவிடலாம் என்றாலும், பெட்ரோல் & டீசலை போன்று சிஎன்ஜி-இன் விலையும் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது, அதன் உரிமையாளர்களின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் தற்போது சிஎன்ஜி-இன் விலையை மத்திய அரசு குறைக்க உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அவர்களுக்கு சற்று ஆறுதலை தந்திருக்கும்.

பெட்ரோல் & டீசல் எரிபொருளின் விலை தற்சமயம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நான் கூற வேண்டிய தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் இவற்றின் விலையுயர்வை நாம் தினந்தோறும் எதிர்க்கொண்டுதான் வருகிறோம். அதில் இருந்து தப்பிக்கவே சிலர் சிஎன்ஜி பக்கம் சென்றனர். அவர்களை விலையுயர்வில் இருந்து காப்பாற்றவே மத்திய அரசு சிஎன்ஜி-இன் விலையை நிர்ணயிப்பதில் புதிய ஃபார்முலாவை கையில் எடுக்கிறது.
இயற்கை எரிவாயுவின் விலை கடந்த காலங்களில் குறைவாக இருந்து வந்தது. ஆனால் சர்வதேச சந்தையில் ஆற்றல் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதினால் இயற்கை எரிவாயுவின் விலைகளூம் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. மத்திய அரசு மேற்கொள்ள உள்ள இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி, சிஎன்ஜி வாகனங்களை சமீப காலத்தில் அதிக எண்ணிக்கையில் சந்தைக்கு கொண்டுவந்துள்ள மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும் அத்தகைய காலத்தை எட்டும் வரையில், இடைப்பட்ட காலத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் நமது மத்திய அரசு மும்முரமாக உள்ளது. இதனாலும், சிஎன்ஜி விலையை குறைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாலும் வரும் ஆண்டுகளில் சிஎன்ஜி வாகன விற்பனை சூடுப்பிடிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








