5 அடி நீளத்தில் நல்லா கருகருவென்று... ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ!!
வாகனங்களை பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தாலே பிரச்சனை தான். ஒன்று, அத்தகைய வாகனங்கள் பழுதாகிவிடும் அல்லது அவற்றை பூச்சிகளும், புழுக்களும் தங்களது வீடாக மாற்றிக் கொள்ளக்கூடும். சில நேரங்களில் பாம்பு கூட அந்த வாகனங்களில் தஞ்சம் அடையலாம். அவ்வாறுதான், இங்கு ஒருவரது ஹீரோ பிளஷர் ஸ்கூட்டரின் ஹெட்லேம்பிற்குள் கடும் விஷம் கொண்ட கோப்ரா பாம்பு ஒன்று படுத்திருந்துள்ளது. பார்ப்போரை பதற வைக்கும் இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியா முழுவதும் கடுமையான வெப்ப அலைகள் வீசி வருவதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. நம் தென்னிந்திய மாநிலங்களில் பருவமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது என்றாலும், வட இந்தியாவில் இன்னும் கோடை காலம் முடியவில்லை. வெயிலில் இருந்து தப்பிக்க ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்கள் என்னென்னமோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், அந்த பகுதிகளில் வாழும் உயிரினங்களும் கடும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. அந்த வகையில், கோப்ரா பாம்பு ஒன்று இதமான சூழலுக்காக ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர் ஒன்றின் ஹெட்லேம்ப் குடுவைக்குள் தஞ்சம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்கூட்டரின் ஹெட்லேம்பிற்குள் நன்கு சவுகரியமாக படுத்திருந்த பாம்பை வெளியே பிடித்து இழுத்தது அதற்கு முற்றிலுமாக பிடிக்கவில்லை என்பதை வீடியோவில் தெளிவாக காண முடிகிறது. வெளியே கொண்டு வரப்பட்ட பின் இந்த கோப்ரா பாம்பு கோபத்தில் ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரை கடிப்பதையும் வீடியோவில் காணலாம்.

பாம்பு பிடிப்பதில் நன்கு அனுபவம் வாய்ந்தவர் இந்த கோப்ரா பாம்பை பிடித்துள்ளார் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். ஏனெனில், ஆர்வத்தில் நீங்களாக சென்று பாம்பு பிடிக்க முயற்சிக்க வேண்டாம். இந்த பாம்பு பிடிக்கும் நபரது பெயர் ராஜேஷ். இந்தூரை சேர்ந்தவர். ஆதலால், இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றதாக இருக்கலாம்.
ஆரம்பத்தில், ஸ்கூட்டரின் முன்பக்க பேனலில் இந்த கோப்ரா பாம்பு இருந்தது. ராஜேஷ் அதனை பிடிக்க முயற்சித்ததை அடுத்து, அது ஸ்கூட்டரின் ஹெட்லேம்ப் பகுதிக்கு சென்றுவிட்டது. இதனால், ஸ்கூட்டரின் ஹெட்லேம்ப் கௌலை லேசாக கழற்றினர். பின் அதனை திறந்து பார்த்ததில், எங்கேயும் போக முடியாமல் தடிமனான அந்த பாம்பு அங்கேயே சிக்கிக் கொண்டு இருந்தது.

இதனால், அதன் கோபம் உச்சத்தில் இருந்தது. பார்க்கும் அனைத்தையும் கடிக்கும் அளவிற்கு கோபத்தில் இருந்தது. சில நேரங்களில் அது தன்னையே கடித்துக் கொள்வதையும் வீடியோவில் காணலாம். ஏற்கனவே கூறியதுபோல், இந்த கோப்ரா பாம்பு ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரை கடித்துள்ளது. அதுமட்டுமின்றி, இதன் விஷம் ஆனது ஸ்கூட்டரின் முன்பகுதியில் நிறைய இடங்களில் தெறித்துள்ளது.
பொதுவாக, கோடை காலங்களில் நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில்தான் இவ்வாறு பாம்புகள், பூச்சிகள் அடைக்கலம் புகும். அதுவே, மழைக்காலங்களில் ரன்னிங்கில் இருக்கும் வாகனத்தில் கூட அவை தஞ்சம் அடையலாம். ஏனெனில், அத்தகைய நேரத்தில் அவற்றிற்கு கதகதப்பான வெப்பம் தேவைப்படும். ஆதலால், வாகனத்தை எப்போதும் துடைத்து சுத்தமாக வைத்திருங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாம்புகள் வாகனத்திற்குள் நுழைவது ஒன்றும் புதியது அல்ல. மலை மற்றும் காட்டுப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர் இத்தகைய பிரச்சனையை அவ்வப்போது சந்திப்பீர்கள். உலகளவில் கடும் விஷம் கொண்ட பாம்புகளுள் கோப்ராவும் ஒன்று. இருப்பினும், இயற்கையின் முன்பு யாராக இருந்தாலும் ஒன்றே என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









