காபி கழிவிலிருந்து வாகன எரிபொருள்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
இன்னும் 53 ஆண்டுகளுக்குத்தான் எண்ணெய் வளம் இருக்கும் என ஆய்வு முடிவுகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாகனங்களுக்கான மாற்று எரிபொருள் நுட்பங்களை தயாரிப்பதற்கு பொறியாளர்கள் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.
ஐஸ்க்ரீமில் ஓடும் கார் உள்பட பலவித எரிபொருள் வாகனங்களை உலகம் பார்த்துவிட்டாலும், இப்போது காபியிலிருந்து புதிய வாகன எரிபொருளை உருவாக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இங்கிலாந்தை சேர்ந்த பாத் பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் குழுதான் இந்த காபி எரிபொருளை கண்டுபிடித்துள்ளது. காபி எரிபொருள் என்றவுடன் காபி கொட்டைக்கு தட்டுப்பாடு வந்துவிடும் என அச்சப்பட வேண்டியதில்லை.
காபி கொட்டையின் கழிவை வைத்து உயிரி எரிபொருளை தயாரித்து இந்த விஞ்ஞானிகள் வியக்க வைத்துள்ளனர். இந்த உயிரி எரிபொருளின் மூலம் வாகனங்களை இயக்க முடியும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
மேலும், பல்வேறு வகையான காபி செடிகளிலிருந்து கிடைத்த கொட்டைகளை வைத்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்தில் இருந்து உயிரி எரிபொருளை தயாரிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. அதேவேளை, பெரிய அளவில் இந்த காபி எரிபொருளை தயாரிப்பதில் சிக்கல் இருந்தாலும், ஓரளவு எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








