கொரோனா வார்டுக்கு போனது தெரியும்... ஆனால் மு.க.ஸ்டாலின் செய்த இன்னொரு தரமான சம்பவம் பத்தி யாருக்கும் தெரியாது
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த காரியத்திற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிக பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு, முதல் மற்றும் மிகப்பெரிய சவாலாக கொரோனா இரண்டாவது அலை உருவெடுத்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தளர்வுகள் அற்ற முழுமையான ஊரடங்கு, ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என தமிழக அரசு தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அத்துடன் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளதால், தற்போது ஆம்புலன்ஸ்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் தற்போது கார்கள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டு, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்த டாக்ஸி ஆம்புலன்ஸ் சேவைக்காக மத்திய சுகாதாரத்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தது.

இந்த வரிசையில் இன்றும் (மே 30) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டாக்ஸி ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை, தளர்வுகள் அற்ற முழுமையான ஊரடங்கால் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நன்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே உள்ளது. எனவே இந்த மூன்று மாவட்டங்களிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திருப்பூர் மாவட்டத்தில் 20 கார் ஆம்புலன்ஸ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இதுதவிர கோவையிலும் கார் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவையில் பழைய டொயோட்டா இன்னோவா கார்கள் டாக்ஸி ஆம்புலன்ஸ்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டொயோட்டா இன்னோவா இந்தியாவில் மிகவும் பிரபலமான எம்பிவி ரக கார் ஆகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக நம்பகத்தன்மையை கொண்ட கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா உள்ளது.

எந்தவிதமான பிரச்னையும் இன்றி பல லட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் ஓடிய டொயோட்டா இன்னோவா கார்கள் பற்றிய செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் உங்களுக்கு வழங்கியுள்ளது நினைவிருக்கலாம். இதன் காரணமாகவே டொயோட்டா இன்னோவாவை பலரும் விரும்புகின்றனர். தற்போது பழைய டொயோட்டா இன்னோவா விற்பனையில் இல்லை.

அதற்கு பதிலாக டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரை விற்பனை செய்து வருகிறது. எனினும் பழைய டொயோட்டா இன்னோவா காரை இன்னமும் புதிது போல பலர் பராமரித்து கொண்டுள்ளனர். தற்போது விற்பனையில் உள்ள இன்னோவா க்ரிஸ்ட்டாவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு சவால் அளிக்கும் வகையிலான போட்டி மாடல் எதுவும் தற்போதைக்கு இந்திய சந்தையில் இல்லை. நேரடி போட்டி இல்லை என்றாலும், விற்பனையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு, கியா கார்னிவல் சவால் அளித்து வருகிறது. கோவையில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியது தவிர, மற்றொரு விஷயத்திற்காகவும் முதல்வர் கவனம் பெற்றுள்ளார்.

ஆம், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், பிபிஇ கிட் அணிந்து கொண்டு, கொரோனா வார்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக விசிட் அடித்தது அனைவரது பாராட்டுக்களையும் அவருக்கு பெற்று தந்துள்ளது. மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக இதனை செய்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








