கோவை மாநகரம் மொத்த தமிழகத்துக்கே முன் உதாரணமா இருக்கு!! கோவை அழகை இலவசமா சுற்றி பார்க்க செம்ம சான்ஸ்!
கோயம்புத்தூரில் அனைவரையும் கவரும் விதமாக டபுள் டெக்கர் (Double Decker) பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. ஜனவரி 8ஆம் தேதி வரையில் இயக்கப்பட உள்ள இந்த பேருந்து சேவையை மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டபுள் டெக்கர் பேருந்து சேவை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோயம்புத்தூரில் வருகிற 2024 ஜனவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் கோவை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதன்படி, கோவை மாவட்டத்திற்கு உண்டான கலை நிகழ்ச்சிகள், ராயல் படகு கண்காட்சி, ஏரியில் லேசர் ஒளி கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன.

மாநகர தெருக்கள் முழுவதும் வண்ண ஓவியங்களால் அழகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன், மாரத்தான் 5கிமீ மற்றும் 10கிமீ என இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. அத்துடன், முதியவர்களுக்காக 2.5கிமீ நடை மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கோவை விழாவை சிறப்பிக்கும் விதமாக டபுள் டெக்கர் பேருந்து சேவை கோயம்புத்தூர் மாநகரில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த டபுள்-டெக்கர் பேருந்து சேவையின் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். விருப்பப்படுவோர் bit.ly/doubletakkar என்ற இணையத்தள பக்கத்தில் பேருந்து சேவையை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். அடுத்த நாளுக்கான முன்பதிவுகள் அதற்கு முந்தைய நாள் மாலை 4 மணிக்கு திறக்கப்படும்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செயல்படுத்தப்படுவதால், புக்கிங் துவங்கிய சில மணிநேரங்களிலேயே நிரம்பிவிடும். ஆதலால், முடிந்தவரையில் மாலையிலேயே முன்பதிவு செய்துவிடுங்கள். ஜனவரி 8ஆம் தேதி வரையில் இயக்கப்பட உள்ள இந்த டபுள்-டெக்கர் பேருந்தின் மூலமாக கோயம்புத்தூர் நகரின் செழிப்பான இயற்கை அழகை சுற்றிப் பார்க்கலாம்.
தலா 36 இருக்கைகள் கொண்ட இரு டபுள்-டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 2024 ஜனவரி 8ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையில் இந்த பேருந்து சேவை வழங்கப்பட உள்ளது. திருச்சி சாலை, அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, கணபதி மேம்பாலம் ஆகிய பகுதிகள் வழியாக டபுள்-டெக்கர் பேருந்துகள் செல்லும்.

இந்த பயணம் போக்குவரத்து நெரிசலை பொருத்து 30 முதல் 45 நிமிடங்கள் வரையில் இருக்கும். கோவை வ.உ.சி பூங்கா அருகே நடைபெற்ற இந்த டபுள்-டெக்கர் பேருந்து சேவை அறிமுக விழாவில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் உள்பட அதிகாரிகளும் பலர் கலந்துக் கொண்டனர்.
கோவை விழா 2009இல் இருந்து வருடா வருடம் நடத்தப்பட்டு வரும் ஒன்றாகும். இந்த விழாவின் 10ஆம் ஆண்டின்போது முதல்முறையாக டபுள்-டெக்கர் பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்ததால், அப்போதில் இருந்து ஒவ்வொரு வருடமும் டபுள்-டெக்கர் பேருந்து சேவை கோவை விழாவின்போது தவறாமல் இடம்பெறுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்களை ஒருங்கிணைக்க இவ்வாறான விழாக்கள் நடத்தப்படுவது அவசியமான ஒன்றே. இதனை கோயம்புத்தூர் மாநகராட்சி செவ்வனே செய்து வருகிறது. டபுள்-டெக்கர் பேருந்து சேவை அசத்தலான ஒரு விஷயம் ஆகும். இது சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும். இந்த இலவச டபுள்-டெக்கர் பேருந்து சேவையை யார் யாரெல்லாம் பயன்படுத்த போகிறீர்கள்?


Click it and Unblock the Notifications









