சென்னை போலிஸுக்குகூட இப்படி ஒரு வண்டி தரல.. 150 கிலோ எடைனாலும் அசால்டா தாங்கும்!
காவலர்களின் பணி நாளுக்கு நாள் சவால் நிறைந்ததாக மாறி வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே காவலர்களின் ரோந்து பணியை ஸ்மார்ட்டானதாக மாற்றும் பொருட்டு கோவை நகர காவல்துறையின் பயன்பாட்டில் விநோதமான உருவம் கொண்ட மூன்று சக்கர வாகனம் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கின்றது. காலை ரேஸ் கோர்ஸில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்களுக்கு, இந்த வாகனத்துடன் போலீஸார்கள் வலம் வருவதைப் பார்த்ததும் பெருத்த ஆச்சரியம் ஏற்பட்டு இருக்கின்றது. முன்னாடி நாள் வரை நடந்தும், டூ-வீலர்களில் வலம் வந்தே காவலர்கள் பணியாற்றி வந்தனர்.
இதையே தொடர்ச்சியாக பார்த்து வந்த கோவை மாநகர மக்களுக்கு, ஞாயிற்றுக் கிழமை காலையில் விநோதமான மூன்று சக்கர வாகனத்தில் போலீஸார் வந்தததைப் பார்த்து ஆச்சரியமடைந்திருக்கின்றனர். சனிக்கிழமை இரவே இந்த வாகனம் போலீஸார்களின் பணியில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே காவலர்கள் அந்த வாகனத்தில் தங்களின் ரோந்து பணியை ஞாயிறு காலையில் காவலர்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

இது ஓர் டிரைக் வகை இ-வாகனம் ஆகும். ஆமாங்க, மின்சாரத்தில் இயங்கும் வகையிலேயே இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியே போலீஸுக்கு தயாரித்துக் கொடுத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்கள் இந்த வாகனத்திற்கு 'ட்ரைக்' என பெயர் சூட்டியிருக்கின்றனர்.
நகர்ப்புற மற்றும் நெரிசலான பகுதிகளில் வலம் வர ஏதுவான ஓர் எலெக்ட்ரிக் வாகனமே இதுவாகும். போலீஸ்காரர்கள் விரைந்து செயல்பட இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக, காவலர்களின் ரோந்து பணிக்கென்றே இந்த வாகனம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், இதுவரை ஒரே ஒரு யூனிட் மட்டுமே தயார் செய்யப்பட்டு காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் மேலும் சில யூனிட்டுகள் காவல்துறையின் பயன்பாட்டில் இணைக்கப்பட இருப்பதாக கோவை மாநகர காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் டிரைக், ரேஸ் கோர்ஸ் மற்றும் வாலாங்குளம் ஆகிய பகுதிகளைச் சுற்றியிருக்கும் இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் வகையிலேயே இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, கோவையின் மேலும் சில முக்கிய பகுதிகளிலும் இந்த வாகனம் ரோந்து பணிக்காக இணைக்கப்பட இருப்பதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், ஆர்எஸ் புரம் மற்றும் நகரத்தின் மேலும் மூன்று பகுதிகளில் விரைவில் இந்த வாகனம் ரோந்து பணியில் இணைக்கப்பட இருக்கின்றது.
கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டே இந்த மின்சார வாகனத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் கோவை காவல்துறை களமிறங்கி இருக்கின்றது. பார்க்க விநோதமாகவும், குட்டியாகவும் காட்சியளிக்கும் இந்த எலெக்ட்ரிக் வாகனம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைத் தன்னுள் தாங்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
பொது முகவரி அமைப்பு, ஜிபிஎஸ் மற்றும் ஃபிளாஷ் லைட் ஆகியவை இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், காவல் பணி கூடுதல் ஸ்மார்ட்டான பணியான இந்த வாகனத்தால் மாறியிருக்கின்றது. இந்த மூன்று சக்கர வாகனத்தால் 150 கிலோ வரையிலான பாரத்தை சுமக்க முடியும்.
மேலும், இதில் 720 Wh லித்தியம் ஃபெர்ரோ பாஸ்பேட் பேட்டரி இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்களே போதுமானது. அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்தால் 30 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 12 கிமீ ஆகும். ஆகையால், இதனால் விபத்து ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என அஞ்சத் தேவையில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வாகனத்தின் உற்பத்தி செலவு ரூ. 50 ஆயிரம் என கூறப்படுகின்றது. இந்த குறைந்த விலை வாகனமே விரைவில் மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸின் உதவிக்காக இணைக்கப்பட இருக்கின்றது. பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த வாகனம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்றது. அதேவேளையில், சுற்றுச் சூழலுக்கு உகந்த வாகனமாகவும் இந்த வாகனம் இருக்கும்.


Click it and Unblock the Notifications








