இனி ஆக்ஸலரேட்டரை முறுக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு 10 தடவை யோசிக்கணும்! ஒரே போடாக போட்ட போலீஸ்!
இந்திய சாலைகளில் நடைபெற்று வரும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு அதிவேகம்தான் மிக முக்கியமான காரணமாக உள்ளது. இதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணம் செய்வதை தடுக்க, தொழில்நுட்பத்தின் உதவியை அரசு நாட தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோவையில் மிக முக்கியமான திட்டம் ஒன்று செயல்படுத்தப்படவுள்ளது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலமுருகன் இந்த திட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இதுகுறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

கோவை மாநகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சக்தி சாலை, அவினாசி சாலை மற்றும் பாலக்காடு சாலை ஆகிய பகுதிகளில், அதிநவீன ரேடார் கேமரா பொருத்தப்படவுள்ளது. குறிப்பிட்ட வரம்பை தாண்டி அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து, அபராதம் விதிப்பதற்காகவே இந்த கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த கேமராக்கள், பகல் நேரத்தில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் கூட துல்லியமாக படம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நம் அனைவருக்கும் ஒரு பழக்கம் உள்ளது. காவல் துறையினர் இல்லாவிட்டால் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோம். அதற்காக அனைத்து இடங்களிலும் காவல் துறையினரை வைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது கடினமானது.

எனவே காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணியை இந்த அதிநவீன கேமராக்கள் கச்சிதமாக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த கேமராக்கள் செயல்பாட்டிற்கு வந்த பின்னர், கோவை மாநகரில் அதிவேகமாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறையும் என போக்குவரத்து காவல் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே கோவை மாநகரில் தற்போது மற்றொரு விதிமுறை மிகவும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதுதான் அந்த விதிமுறை. பொதுவாக இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதுதான் விதிமுறை.
ஆனால் பல்வேறு நகரங்களில் இந்த விதிமுறை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. எனினும் கோவை மாநகரில் போக்குவரத்து காவல் துறையினர் இந்த விதிமுறையை மிகவும் தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
எனவே கோவை மாநகரில் வசிப்பவர்கள், இனி ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்வதை வழக்கமாக்கி கொள்வது நல்லது. இது காவல் துறையினரின் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதில் இருந்தும் காப்பாற்றும் என்பதை அனைவரும் மனதில் வைத்து கொள்வது சிறந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிவேகத்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதை தடுப்பதற்காகவும் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரியவை. நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, விதிமுறை மீறல்கள் குறையும் என்பதில் மாற்று கருத்தில்லை.
ஒரு சில வெளிநாடுகளில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதற்கு, விதிமுறைகளும், நடவடிக்கைகளும் மிகவும் கடுமையாக இருப்பதுதான் காரணமே. மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றங்கள் உள்பட, அதே பாணியிலான நடவடிக்கைகள் தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட தொடங்கப்பட்டிருப்பது வரவேற்க கூடிய ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications