சொகுசு கார்களை ஒதுக்கி விட்டு மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்... தமிழர் பாரம்பரியம் மீண்டு விடும்!
கோவையில் திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவில் திருமண நிகழ்ச்சிகளை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையால், அந்த நிலையில் மாறுதல்கள் இருந்தாலும், பொதுவாக இந்தியாவில் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாகதான் நடக்கின்றன. ஆடம்பரம் என வந்து விட்டால், அதில் மிகவும் விலையுயர்ந்த சொகுசு கார்களும் கண்டிப்பாக அடங்கும்.

திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் வலம் வருவதற்காக ஒரு சிலர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை தயார் செய்கின்றனர். கார்களை அலங்கரிப்பதற்கு என்றே குறிப்பிட்ட தொகை செலவு செய்யப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் காரை வாடகைக்கு எடுத்தாவது திருமணத்திற்கு பயன்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இங்கு அதிகம்.

அதாவது ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்க வேண்டும், திருமணம் முடிந்தவுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். ஒரு முறை திருமண நிகழ்ச்சி ஒன்றில் பவனி வந்த ஆடம்பர சொகுசு கார்கள் பற்றிய செய்தி ஒன்றை கூட டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வெளியிட்டிருந்தது.

அந்த திருமண நிகழ்ச்சியின் ஊர்வலத்தில், லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே, லம்போர்கினி உருஸ், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் என மிகவும் விலை உயர்ந்த கார்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த திருமணம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றதாக அப்போது தகவல்கள் வெளியானது.

ஆனால் இவை அனைத்திற்கும் மாறாக மிகவும் வித்தியாசமான திருமண நிகழ்ச்சி ஒன்று கோவை சூலூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இங்கே பாரம்பரியத்தை பின்பற்றும் விதமாக, சொகுசு கார்களுக்கு பதில், மாட்டு வண்டியில் மணமக்கள் வலம் வந்துள்ளனர். இந்த திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் பாலுமகேந்திரன். கபடி வீரரான இவர் எம்.ஏ., படித்துள்ளார். அதேபோல் கோவை குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவர் எம்.எஸ்சி., படித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் சூலூரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் மணமகனின் வீட்டிற்கு மணமக்கள் செல்வது வழக்கம்.

இதற்கு பொதுவாக கார்களைதான் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, பாலுமகேந்திரன்-சுகன்யா தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்துள்ளனர். இங்கே வழக்கத்திற்கு மாறாக என்று குறிப்பிடுவதே அபத்தம்தான். நமது பாரம்பரியப்படி என்றே சொல்ல வேண்டும். ஆனால் மாட்டுவண்டி பயணம் இன்று நடைமுறையில் வழக்கத்திற்கு மாறான ஒன்றாக மாறி விட்டது.

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையிலும், அதை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே மணமக்கள் மண கோலத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மணமகள் சுகன்யா கூறுகையில், ''நான் மாட்டு வண்டியில் பயணம் செய்ததே இல்லை. ஆனால் திருமணத்தின்போது மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது'' என்றார்.

தற்போது தமிழர்களின் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதை நம்மால் கண் கூடாக பார்க்க முடிகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் ஏற்படுத்திய எழுச்சி, அதற்கு ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது. இந்த திருமணமும் நமது கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சிதான்.

தற்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதற்கு என்றே சொகுசு கார்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் அதிகம் முளைத்து விட்டன. இந்த வசதியை பயன்படுத்துபவர்களும் அதிகமாகி விட்டனர். இப்படிப்பட்ட சூழலில் பாரம்பரியத்தை காக்க எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். இதுகுறித்து நியூஸ்18 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications