காற்றில் இயங்கும் கார்.... பொறியியல் மாணவர்கள் தெறி சாதனை... !!
இப்போதுள்ள விலைவாசிக்கு பெட்ரோல், டீசல் போட்டு கட்டுபடியாகுமா? இதற்கு பயந்துட்டுதான் சார் காரை பெரும்பாலும் வெளியே எடுக்கறதில்லை. இந்த வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். சில சமயங்களில் நாமே கூட சொல்லியிருப்போம்.
என்னதான் கார் வாங்கி பந்தாவாக வீட்டில் நிறுத்தினாலும், அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகவில்லை என்பது பெரும்பாலானோரின் எண்ணம். பெட்ரோல், டீசலுக்கு பதிலாக காற்றில் கார் இயங்கினால் பரவாயில்லை என்று விளையாட்டாக சொல்வதுண்டு. அந்த விளையாட்டு வார்த்தையை நல் வினையாக மாற்றியிருக்கின்றனர் கல்லூரி மாணவர்கள்.

கண்டுபிடிப்பு
குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் நான்கு மாணவர்கள், தங்களது இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்டுக்காக காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.

சாத்தியமே...
இதென்ன விசித்திரமாக இருக்கிறது என்கிறீர்களா? நம்புங்கள், நிஜம்தான். சில தொழில்நுட்ப யுத்திகளைப் பயன்படுத்தி இதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள் இளைய தலைமுறையினர்.

பைக்குப் பயன்படுத்தப்படும் 110 சிசி எஞ்சின் அந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. காற்றின் உந்துவிசையில் இயங்கக் கூடிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடின முயற்சி
ஓராண்டாக அந்த மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இந்த கார் உருவாக்கம் பெற்றுள்ளது. 12 முறை டேங்கில் காற்றை நிரப்பினால் ஒன்றிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்கிறார்கள் அந்த மாணவர்கள். 15 முறை நிரப்பினால் மூன்று கிலோ மீட்டருக்கு கார் நிற்காமல் செல்லுமாம்.

மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் அதை மேம்படுத்தினால், வேகமும், மைலேஜூம் அதிகரிக்கும் என்கின்றனர் அந்த மாணவர்கள்.

சிறிய வணிக வளாகங்கள், ரயில் நடைமேடை உள்ளிட்டவற்றில் இந்தக் கார்கள் பயன்படும். புதிய யுகத்தின் இதுபோன்ற கண்டுபிடிப்புகள், நாளைய உலகின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை விதைக்கின்றன.


Click it and Unblock the Notifications








