“ஸ்பேனரை எடு”... நேரடியாக களத்தில் இறங்கிய ராகுல் காந்தி!! டெல்லியில் பைக் மெக்கானிக்ஸ் உடன் ஓர் தரமான சம்பவம்
டெல்லியில் உள்ள ஓர் மெக்கானிக் கடையை திடீரென பார்வையிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அங்கிருந்த மெக்கானிக்குகள் உடன் கலந்துரையாடிய படி அவர்களது வேலைகளை செய்து பார்த்துள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக நாட்டு மக்களை திருப்பும் பொருட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறார். இதன்படி கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் "பாரத் ஜோடோ யாத்ரா" என்ற பெயரில் கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீர் வரையில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தாடி, மீசை இல்லாமல் கன்னியாக்குமரியில் துவங்கி, முழு தாடி, மீசையுடன் காஷ்மீரில் நிறைவடைந்த ராகுல் காந்தியின் நடைப்பயணம் பல மாதங்களுக்கு இந்தியா முழுவதும் இணையத்தில் டிரெண்டாக இருந்தது. நீண்ட தொலைவு யாத்ராவை முடித்துக்கொண்டு சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி மீண்டும் தனது அரசியல் பயணத்தை துவங்கினார். மீண்டும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது நிறை, குறைகளை கேட்க துவங்கினார் ராகுல் காந்தி.
இந்த வகையில், பலத்தரப்பட்ட பணியாளர்களை அவர்களது இடத்திற்கே சென்று சந்தித்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் கரோல் பாக் என்ற பகுதியில் உள்ள பைக் மெக்கானிக் கடைக்கு சென்று அங்குள்ள மெக்கானிக்குகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். சொந்த வாழ்வில் மற்றும் தொழிலில் உள்ள நிறை, குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி கையில் ஸ்பேனரை எடுத்து அவர்களது வேலையை செய்தும் பார்த்துள்ளார்.

கடந்த ஜூன் 27ஆம் தேதி நடந்துள்ள இந்த நிகழ்வை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் பதிவுகளில், "இந்த கைகள் இந்தியாவை உருவாக்குகின்றன. இந்த ஆடைகளில் கிரீஸ் தடவுவது நமது பெருமையும், கண்ணியமும் ஆகும். ஒரு மக்கள் ஹீரோ மட்டுமே அவர்களை ஊக்குவிக்க வேலை செய்கிறார்.
டெல்லியில் கரோல் பாக்கில் பைக் மெக்கானிக்குகளுடன் @ராகுல் காந்தி. 'பாரத் ஜோடோ யாத்ரா' தொடர்கிறது..." என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அப்போது எடுக்கப்பட்ட படங்களை "ஸ்பேனர்களை திருப்பும் கைகளில் இருந்து கற்றுக்கொள்வதும், பாரதத்தின் சக்கரங்களை அசைக்க வைப்பதும்" என்கிற கேப்ஷன் உடன் ராகுல் காந்தியும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த இணைய பதிவுகளில் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் ஒன்றின் சைடு பேனலின் போல்டை திருகும் ராகுல் காந்தி அவர்கள், மற்றொரு படத்தில் மற்றொரு பைக்கின் என்ஜின் ஸ்ப்ராக்கெட்டை கையில் எடுத்து பார்ப்பதுப்போல் உள்ளது. சமீபத்தில்தான் அமெரிக்காவில் சுமார் 190 கிமீ தொலைவிற்கு லாரி பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கோடிக் கணக்கில் தொண்டர்களை கொண்ட ஓர் கட்சியின் தலைவர் ஆட்சியில் இல்லாத, பாதுகாப்பற்ற சூழலிலும் பொது மக்களை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று சந்திப்பது உண்மையில் வரவேற்கத்தக்கக்கூடிய விஷயமாகும். அதுவும், பைக் மெக்கானிக்குகள் போன்ற வேலைக்கு சென்றால்தான் வீட்டில் சாப்பாடு என வாழ்பவர்களை அவர்களது பணியிடத்திற்கே சென்று சந்திப்பது பாராட்டக்கூடிய ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications
