கஸ்டமரை ஏமாற்றிய கார் கம்பெனி! ஒரே உத்தரவில் நீதிபதி சோலியை முடிச்சுட்டாரு! நீங்க நல்லா இருக்கணும்யா!
நுகர்வோர் நீதிமன்றங்களில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலமுறை தண்டிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் ஃபோர்டு இந்தியா (Ford India) நிறுவனம் தற்போது தண்டனைக்கு ஆளாகியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு பழுதான காரை ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்ததுதான் இதற்கு காரணம்.
இழப்பீடாக 29 லட்ச ரூபாய் வழங்குவதுடன், புத்தம் புதிய ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavour) கார் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாதிப்பிற்கு உள்ளான ஃபோர்டு எண்டேவர் காரின் உரிமையாளர், அதனை கடந்த 2016ம் ஆண்டு, அதாவது 7 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார்.

நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி கௌதம் சௌர்டியாதான், அந்த வாடிக்கையாளருக்கு சாதகமான தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளார். புதிய கார் மற்றும் 29 லட்ச ரூபாய் இழப்பீடு ஆகியவற்றுடன், இந்த 29 லட்ச ரூபாய்க்கு கடந்த 7 வருடங்களுக்கு 6 சதவீதம் வட்டி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதுதவிர மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக வாடிக்கையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவுகளுக்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிபதியின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் உள்ள ஜி.கே.ஃபோர்டு டீலர்ஷிப்பில்தான், பிரச்னைக்குரிய எண்டேவர் கார் வாங்கப்பட்டது.

1 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 2 வருடங்கள் வாரண்டியுடன் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வாங்கிய சிறிது காலத்திலேயே காரில் ஏகப்பட்ட பிரச்னைகள் வர தொடங்கி விட்டன. இந்த கார் பல முறை பிரேக் டவுன் ஆகி நின்றுள்ளது. அப்படி பிரேக் டவுன் ஆகி விட்டால், ஸ்டார்ட் செய்வது மிகவும் கடினம்.
இந்த வரிசையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கார் மீண்டும் ஒரு முறை பிரேக் டவுன் ஆனது. அப்போது அந்த காரின் உரிமையாளர், சர்வீஸ் சென்டரின் உதவியை நாடியுள்ளார். பழுதை சரி செய்வதற்காக மெக்கானிக்கை அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுள்ளார். ஆனால் சர்வீஸ் சென்டரில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த உரிமையாளர், காரை திரும்ப பெற்று, அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து தரும்படி கேட்டுள்ளார். இதற்கும் சரியான பதில் கிடைக்காத காரணத்தால், வாடிக்கையாளர் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றார். இதன்பின் அவரின் ஃபோர்டு எண்டேவர் காரை பரிசோதனை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் ஆய்வு செய்து பார்த்ததில், காரில் உற்பத்தி குறைபாடுகள் இருந்தது தெளிவாக கண்டறியப்பட்டது. அத்துடன் அந்த பிரச்னைகள், சரி செய்ய முடியாத அளவுக்கு இருந்தன. எனவேதான் வாடிக்கையாளருக்கு சாதகமான உத்தரவை நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது. ஆனால் இங்கேயும் ஒரு பிரச்னை இருக்கிறது.
ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறி விட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், அந்நிறுவனம் எப்படி புத்தம் புதிய எண்டேவர் காரை வாடிக்கையாளருக்கு வழங்கும் என்பது தெரியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன நடக்கப்போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு வாடிக்கையாளரும் புதிய காரை ஏகப்பட்ட கனவுகளுடன், டெலிவரி எடுக்கின்றனர். ஆனால் பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட புதிய காரில், தொடர்ச்சியாக பிரச்னைகள் என்றால், யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே கார் நிறுவனங்கள் உற்பத்தியின்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








