விளம்பரத்தில் சொன்ன மைலேஜ் கிடைக்காததால் கார் ஓனர் செய்த அதிரடி! அவ்ளோ பெரிய கம்பெனியை ஒரு ஆட்டு ஆட்டிட்டாங்க!
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சவுதாமினி. இவர் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ஃபோர்டு கிளாசிக் டீசல் (Ford Classic Diesel) கார் ஒன்றை வாங்கினார். இதன் விலை 8,94,876 ரூபாய் ஆகும். கைரலி ஃபோர்டு (Kairali Ford) என்ற ஷோரூமில் இந்த கார் வாங்கப்பட்டது.
இந்த காரின் விற்பனையை அதிகரிப்பதற்காக செய்யப்பட்ட விளம்பரங்களில், ஒரு லிட்டருக்கு 32 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிதான் சவுதாமினி காரை வாங்கினார். ஆனால் விளம்பரங்களில் கூறப்பட்ட அளவுக்கு மைலேஜ் கிடைக்கவில்லை. மிகவும் குறைவாகதான் இந்த கார் மைலேஜ் வழங்கியது. சவுதாமினிக்கு ஒரு லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சவுதாமினி ஏமாற்றமடைந்தார்.

Image used for representation purpose only
ஆனால் மற்ற சராசரி வாடிக்கையாளர்களை போல் சோர்ந்து விடாமல், இந்த பிரச்னையை நுகர்வோர் நீதிமன்றத்தின் (Consumer Court) கவனத்திற்கு அவர் எடுத்து சென்றார். முதலில் சவுதாமினி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் எதிர் தரப்பினரிடம் இருந்து இதற்கு பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே நுகர்வோர் நீதிமன்றத்தில் சவுதாமினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர் தரப்பான கைரலி ஃபோர்டு மற்றும் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர் முன் வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை. சாலைகளின் தன்மை, போக்குவரத்து நெரிசல் மற்றும் ஓட்டும் விதம் ஆகிய காரணிகளை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம் என எதிர் தரப்பினர் வாதிட்டனர். அத்துடன் விளம்பரங்களில் தாங்கள் குறிப்பிட்ட மைலேஜ், மூன்றாம் நபரால் கண்டறியப்பட்டது எனவும் அவர்கள் கூறினர். ஆனால் இந்த வாதங்கள் எதுவும் நீதிமன்றத்தில் எடுபடவில்லை.
இந்த காரின் உண்மையான மைலேஜ் எவ்வளவு என்பதை கண்டறிவதற்காக நிபுணர் ஒருவரை நீதிமன்றம் நியமித்தது. அவர் காரை சோதனை செய்து விட்டு, தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், கார் ஒரு லிட்டருக்கு 19.6 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. அதாவது விளம்பரங்களில் கூறப்பட்டிருந்ததை காட்டிலும், 40 சதவீதம் குறைவான மைலேஜை மட்டுமே கார் வழங்குவது இந்த சோதனையில் கண்டறியப்பட்டது.
எனவே பாதிக்கப்பட்ட ஃபோர்டு கார் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சவுதாமினிக்கு 3.10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கேரள நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, கார் உரிமையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இனிமேல் கார் நிறுவனங்கள் மைலேஜ் விஷயத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது என நாம் எதிர்பார்க்கலாம்.
கார் உற்பத்தியாளரான ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் விற்பனையாளரான கைரலி ஃபோர்டு ஆகிய 2 நிறுவனங்களும் நியாயமற்ற முறையில் வர்த்தகம் செய்திருப்பதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் மைலேஜிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடியவர்களாக உள்ளனர். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். ஓட்டும் விதம், சாலைகளின் தன்மை ஆகியவற்றை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம் என்பது உண்மைதான்.
ஆனால் கார் நிறுவனங்கள் தெரிவிக்கும் மைலேஜிற்கும், கார் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் மைலேஜிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் வருகிறது. இந்த வழக்கில் கூட 40 சதவீதம் குறைவாக மைலேஜ் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான் நீதிமன்றம் தனது சாட்டையை சுழற்றியுள்ளது. இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதால், கார் உரிமையாளர்கள் மத்தியில் இந்த தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் கார் உரிமையாளர்களுக்கு இது ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








