தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
தரமில்லாத சாலைகளை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சாலைகளின் நிலை, பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில்லை. சாலைகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாலும், இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாலும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இதனை புரிந்து கொண்டுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தற்போது புதிய கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. தரமில்லாத சாலைகளை அமைக்கும் ஒப்பந்ததாரர்களை இந்த புதிய கொள்கை தண்டிக்கும். சாலைகளை மோசமாக அமைக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு இந்த புதிய கொள்கையின் கீழ், 1 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

மேலும் 3 ஆண்டுகளுக்கு சாலை பணிகளுக்கான ஏலத்தில் பங்கேற்க ஒப்பந்ததாரர்களுக்கு தடை விதிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த புதிய கொள்கையில் செய்யப்பட்டுள்ளன. சாலைகள் குண்டும், குழியுமாக இருந்து விபத்துக்கள் நடந்தாலோ அல்லது சாலையின் மேற்பரப்பு மோசமாக இருந்தாலோ, அந்த சாலையை அமைத்து பராமரிக்கும் ஒப்பந்ததாரர் கணிசமான தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.

அத்துடன் ஏற்கனவே கூறியபடி சாலை பணிகளுக்கான ஏலத்தில் பங்கேற்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம். இந்த தண்டனைகளுடன் சேர்த்து, மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைப்பதற்கான செலவையும் அவர்களேதான் ஏற்க வேண்டும். இதுகுறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய கொள்கை, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற மறுப்பது ஒரு காரணம் என்றால், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதும் ஒரு காரணம்தான் என்பதை மறுக்க முடியாது.

எனவேதான் சாலைகளை மோசமாக அமைக்கும் ஒப்பந்ததாரர்களை தண்டிக்கும் வகையில் புதிய கொள்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதில், நடவடிக்கைகள் கடுமையாக இருப்பதால், வரும் காலங்களில் சாலைகள் தரமாக அமைக்கப்படும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கலாம்.

அதே சமயம் விபத்துக்களை குறைக்க வேண்டுமென்றால், வாகன ஓட்டிகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். அதிவேகம், செல்போனில் பேசி கொண்டும், குடிபோதையிலும் வாகனங்களை ஓட்டுவது, தலை கவசம், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற செயல்களை வாகன ஓட்டிகள் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








