தரமான சாலையை போடாத ஒப்பந்ததாரர்களுக்கு உச்சபட்ச அபராதம்: அமைச்சர் அதிரடி உத்தரவு...
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்மூலம், தரமான சாலையை போடாத ஒப்பந்ததாரர்களுக்கு உச்சபட்ச அபராதத்தை விதிக்க முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் 2019, செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில், கடந்த காலங்களைக் காட்டிலும் முன்பெப்போதும் இல்லாத அளவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு உச்சபட்ச அளவில் அபராதத்தை வசூலிக்கும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, இன்னும் கூடுதலாக பல்வேறு மாற்றங்களும் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019-ன் கீழ், மோசமான சாலைகள் அமைத்தல் மற்றும் முறையான பராமரிப்பை மேற்கொள்ளாத ஒப்பந்தக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த பதிவு ஒன்றை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ், விதிக்கப்படும் உச்சபட்ச அபராதமானது போக்குவரத்து விதிமீறல்களை செய்யும் பொதுமக்களுக்கு மட்டுமில்லை. கூடுதலாக, முறையாக சாலையை பராமரிக்காத மற்றும் சாலையை அமைக்காத ஒப்பந்ததாரர்களுக்கும் விதிக்க முடியும்" என பதிவிட்டுள்ளார்.

மேலும், அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, முறையாக சாலையை அமைக்காத ஒப்பந்ததார்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும் என தெரிகின்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அதிகபட்ச அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. அதன் ஒரு பங்காக, நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துத்துறை யூனியன்கள் போராட்டத்தைத் கையிலெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேசமயம், இந்த புதிய அபராத திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், பல மாநிலங்கள் மத்திய அரசு வழிகாட்டிய உச்சபட்ச அபராதத்திற்கு பதிலாக குறைந்த அளவில் அபராதத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளன.

மத்திய அரசு, இந்த மாற்றம் கொண்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஓர் முக்கிய காரணம் இருக்கின்றது. அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்கள், அதனால் அதிகரிக்கும் விபத்துகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றைக் கணிசமாக குறைக்கும் நோக்கிலேயே புதிய வாகன சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இதனை பயன்படுத்தி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகின்றது. அதனை நிரூபிக்கும் வகையில், அண்மையில் நீதிமன்ற அலுவலகத்தில் பணி புரியும் அதிகாரி ஒருவரின் செயல்பாடுகுறித்த வீடியோ வெளிவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இருப்பினும், மத்திய அரசு அதிகபட்ச அபராதம் வசூலிப்பதில் விடாப்பிடியாக இருக்கின்றது.
இந்நிலையில், முறையாக சாலையை அமைக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ஆப்பு வைக்கின்ற வகையிலான அறிவிப்பை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, பலரின் கேள்வியும், எதிர்பார்ப்பும் சாலை குறித்தானதாக இருந்தது. இந்த சூழ்நிலையில், அமைச்சர் வெளியிட்டிருக்கும் இந்த தகவல், இனியாவது தரமான சாலைகளை ஒப்பந்ததாரர்கள் அமைப்பார்கள் என நம்பிக்கையை லேசாக வரவழைத்துள்ளது. ஆனால், இதனை பொறுத்திருந்துதான் நாம் உறுதிப்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








