யூடியூப் ஸ்டார்ட் பண்றோம், இதுமாதிரி ஒரு பைக்கை வாங்குறோம்... பிரபல யூடியூப்பரின் ஜாலியான வாழ்க்கை!!
இன்று உலகமே சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. குறிப்பாக, யூடியூப் ஆனது நிறைய பேருக்கு கணிசமான வருவாயை வழங்கும் அளவிற்கு பிரம்மாண்டமானதாக மாறியுள்ளது. இதனால், சினிமா ஸ்டார்களுக்கு இணையாக சில யூடியூப்பர்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருவதை பார்க்க முடிகிறது. அதேநேரம், யூடியூப்பர்களினால் சர்ச்சைகளும் அவ்வப்போது வெடிக்கின்றன. அந்த வகையில், நேபாளம் நாட்டில் சில வருடங்களுக்கு முன் பிரச்சனையில் சிக்கிய யூடியூப்பர் ஜாத் பிரப்ஜோத் (Jatt Prabhjot). இவர் தற்போது புதியதாக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ பைக்கை வாங்கி உள்ளார். யார் இந்த யூடியூப்பர்? அப்படி எந்த மாதிரியான பிஎம்டபிள்யூ பைக்கை இவர் வாங்கியுள்ளார்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
அதிவேக பயணம் எப்போதும், எந்த சூழலிலும் ஆபத்தானதே. இதை உணராமல் பலர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதை நாள்தோறும் செய்திகளில் பார்க்க முடிகிறது. இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது, அதுதான் மறதி. மோசமாக ஒரு சாலை விபத்து நடந்தால் கூட அதனை பற்றி 2, 3 நாட்கள் பேசுகிறோம். அதன்பின் அதை அப்படியே மறந்துவிடுகிறோம்.

இதனால், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, மது போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த விபத்துகளினால் நேரடியாக பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு மட்டுமே அது மீளா துயரமாக அமைகிறது. விபத்தை ஏற்படுத்தியவர்களும் கொஞ்ச நாள் சிறையில் இருந்துவிட்டு பின் தங்களது வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடுகின்றனர்.
அவ்வாறே, நேபாளம் நாட்டில் அதிவேகமாக பைக் ஓட்டி 79 வயது முதியவரை உயிரிழக்க செய்த பிரபல யூடியூப்பர் ஜாத் பிரப்ஜோத் தற்போது சுமார் ரூ.65 லட்சத்தில் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்.ஆர் பைக்கை வாங்கியுள்ளார். ஜாத் பிரப்ஜோத்தின் வாழ்வை புரட்டிப் போட்ட அந்த பைக் விபத்து 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் நடந்தது. அதாவது, அந்த விபத்து நடைபெற்று 1.5 வருடங்களில் புதியதாக மற்றொரு விலையுயர்ந்த பைக்கை இவர் வாங்கியுள்ளார்.

அந்த சம்பவத்தில், விலையுயர்ந்த மற்றும் ஆற்றல்மிக்க கவாஸாகி எச்2 மோட்டார்சைக்கிளில் ஜாத் பிரப்ஜோத் விபத்தை ஏற்படுத்தி இருந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த நேபாள முதியவர் சில நாட்கள் தீவிர சிகிச்சையை பெற்று கொண்ட போதிலும், அவரால் உயிர்பிழைக்க முடியவில்லை. ஆனால் மறுபக்கம், ஜாத் பிரப்ஜோத் தன் வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
மோட்டார்சைக்கிளில் சென்றப்படி வீடியோக்களை காட்சிப்படுத்தி யூடியூப்பில் பதிவிடுவதை ஜாத் பிரப்ஜோத் வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது புதியதாக பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்.ஆர் பைக்கை டெலிவிரி பெற்றிருப்பதையும் வீடியோவாக காட்சிப்படுத்தி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். ஒரு யூடியூப்பர் இவ்வளவு விலையில் ஒரு பைக்கை வாங்குகிறார் என்றால், அதை தனது யூடியூப் சேனலில் பதிவிடாமலா இருப்பார்?

வீட்டில் இருந்து பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் ஷோரூமுக்கு செல்வது வரையில், பின் அங்கு ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த தனது பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்.ஆர் பைக்கை வெளியே கொண்டுவருவது என அனைத்தையும் ஜாத் பிரப்ஜோத் தனது யூடியூப் சேனலில் காட்டியுள்ளார். மேலும், ஷோரூமுக்கு செல்லும் வழியில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள் செல்வதையும் இவர் தனது வீடியோவில் காட்டியுள்ளார்.
சோனியா காந்தி டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காரில் செல்ல அவரது காருக்கு முன்னாலும், பின்னாலும் இரு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களில் பாதுகாப்பு வீரர்கள் செல்வதை காணலாம். இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டவாறே ஷோரூமுக்கு சென்ற ஜாத் பிரப்ஜோத் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களது புதிய பிஎம்டபிள்யூ பைக்கை லாரியில் இருந்து இறக்கி ஷோரூமுக்கு கொண்டு செல்ல உதவினர். ஏனெனில், இந்த வீடியோவை காட்சிப்படுத்திய தினத்தில் பைக்கை இவர் டெலிவிரி பெறவில்லை. அடுத்த நாளில்தான் பெற்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாத் பிரப்ஜோத் முன்பு வைத்திருந்த கவாஸாகி இசட்2 பைக்கும் விலையுயர்ந்தது ஆகும். தற்போது வாங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ பைக்கும் ரூ.65 லட்சம் மதிப்பிலானது என ஏற்கனவே கூறிவிட்டோம். ஒரு யூடியூப்பரிடம் எவ்வாறு இவ்வளவு பணம் அதுவும் குறுகிய காலத்தில் வருகிறது என்பது பெரிய கேள்வியை எழுப்புகிறது. ஆதலால், ஜாத் பிரப்ஜோத் நிச்சயமாக வேறொரு தொழிலையும் கவனிப்பவராக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









