ஜடேஜா மனைவியின் தலைமுடியை இழுத்து தாக்கிய போலீஸ்.. கார் மோதியதால் ஆத்திரம்.. விபத்துக்கு காரணம் யார்
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ஓட்டி வந்த பிஎம்டபிள்யூ கார், போலீஸ்காரரின் பைக் மீது மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர், ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை சரமாரியாக தாக்கினார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ஓட்டி வந்த பிஎம்டபிள்யூ கார், போலீஸ்காரரின் பைக் மீது மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர், ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை சரமாரியாக தாக்கினார். இதன் பின்னணி என்ன? விபத்துக்கு காரணம் யார்? போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ற தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசக்கூடிய முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. சமீப காலமாக இவருக்கு, இந்திய ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகளில் வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக அவர் களமிறக்கப்படுகிறார்.

சர் ஜடேஜா என செல்லமாக அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா, குஜராத் மாநிலத்தில் உள்ள சவுராஷ்டிரா மண்டலத்தை சேர்ந்தவர். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரீவா சோலங்கி, குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில், தனது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 லக்ஸரி எஸ்யூவி காரில், பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது அம்மாவும் உடனிருந்தார்.

ஷாரு செக்ஸன் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, போலீஸ்காரர் ஒருவரின் பஜாஜ் பல்சர் பைக் மீது, ரீவா சோலங்கியின் கார் மோதிவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரீவா சோலங்கி, போலீஸ்காரருக்கு ஏதேனும் ஆகி விட்டதா? என்பதை பார்ப்பதற்காக, காரில் இருந்து இறங்க முயன்றார்.

அதற்குள் அங்கு வந்த அந்த போலீஸ்காரர், ரீவா சோலங்கியை பிடித்து காரில் இருந்து இறக்கினார். பின்னர் அவரது கன்னத்தில் 2,3 முறை அறைந்து, சரமாரியாக தாக்கினார். அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக ஓடி வந்து போலீஸ்காரரிடம் இருந்து, ரீவா சோலங்கியை மீட்டனர்.

ஜாம்நகர் போலீசில் பணியாற்றும் கான்ஸ்டபிளான சஞ்சய் குராஜ்ஜியா என்பவர்தான், ரீவா சோலங்கியை தாக்கியவர். ரீவா சோலங்கியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ரீவா சோலங்கி காயம் அடைந்தார்.

விபத்து நடைபெற்ற பகுதியில்தான் ஜாம்நகர் போலீஸ் எஸ்பி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த கான்ஸ்டபிள் சஞ்சய் குராஜ்ஜியா, தவறான பாதையில் பயணம் செய்ததால்தான் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இரக்கமற்ற இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ரீவா சோலங்கி, போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சஞ்சய் குராஜ்ஜியாவை உடனடியாக கைது செய்தனர். இந்த தகவலை ஜாம்நகர் போலீஸ் எஸ்பி ப்ரதீப் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் அரங்கேறியுள்ளது. போலீஸ்காரர் சஞ்சய் குராஜ்ஜியாதான் விபத்துக்கு காரணம் என விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர். அவர்கள் தங்களை இந்த வழக்கில் ஐ-விட்னஸ் ஆக இணைத்து கொண்டுள்ளனர்.

அப்படி இருக்கையில், ஒரு பெண் என்றும் கூட பாராமல், ரீவா சோலங்கியை கொடூரமாக தாக்கிய போலீஸ்காரர் சஞ்சய் குராஜ்ஜியா மீது கைது நடவடிக்கையுடன் நிறுத்தி விடாமல், இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ரீவா சோலங்கிக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், அதன்பின் சஞ்சய் குராஜ்ஜியா மீது கடுமையான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் எனவும் ஜாம்நகர் போலீஸ் எஸ்பி ப்ரதீப் தெரிவித்துள்ளார். இதன்படி சஞ்சய் குராஜ்ஜியா சஸ்பெண்ட் செய்யப்படுவார் என தெரிகிறது.

சாலையில் நாம் சென்று கொண்டிருக்கையில், விபத்தில் சிக்கிய 2 வாகனங்களின் உரிமையாளர்களோ அல்லது டிரைவர்களோ, வாக்குவாதத்தில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் சட்டையை பிடித்து கொண்டு சண்டையிடுவதையும் அடிக்கடி காண முடிகிறது. இத்தகைய சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன.

எனவே இது போன்ற முரட்டுத்தனமான சம்பவங்களை தவிர்ப்பது அவசியமாகிறது. விபத்து நடைபெற்று விட்டால், எதிர்தரப்பு வாகன உரிமையாளருடன் வாக்குவாதம், அடிதடியில் ஈடுபடுவதை விட, வாகனத்தின் சேதமடைந்த பகுதிக்கான பணத்தை இன்சூரன்ஸ் மூலம் க்ளைம் செய்து கொள்வதே சிறந்தது.

ரவீந்திர ஜடேஜா மனைவி சம்பவத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீதுதான் தவறு உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் தனது பொறுமையை முற்றிலும் இழந்து விட்டார். போலீஸ்காரர் உள்பட யாராக இருந்தாலும் சரி, சாலை விதிகளை முறையாக கடைபிடித்தாலே இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.

முன்னதாக ரவீந்திர ஜடேஜா-ரீவா சோலங்கி திருமணம் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்றது. ரவீந்திர ஜடேஜா, ஜாம்நகரில் புதிய பங்களா ஒன்றை கட்டியுள்ளார். அந்த பங்களாவிற்கு சமீபத்தில்தான் அவர்கள் குடிபுகுந்தனர்.

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் தொடரில், விளையாடி வருகிறார். அவர் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் குவாலிபயர்-1 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








