வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனங்களை வென்றார்
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்துவதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய போக்குவரத்து காவலரின் காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தற்போது தலைவிரித்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வாகனங்களில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

இப்படிப்பட்ட மோசமான போக்குவரத்து சூழல்களுக்கு மத்தியில், நோயாளிகளின் உயிரை காப்பாற்றும் உன்னத பணியை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் பிரச்னையுடன் சேர்த்து, மற்ற வாகன ஓட்டிகள் ஏற்படுத்தும் பிரச்னைகளையும் அவர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விட வேண்டும் என்ற விழிப்புணர்வு பலருக்கு இல்லை.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அதாவது ஆம்புலன்ஸ்கள் வந்தால் நாம் எப்படி ஒதுங்கி வழி விட வேண்டும் என்பதை பலர் அறிந்து வைத்திருப்பதில்லை. இன்னும் சில வாகன ஓட்டிகளோ வேண்டுமென்றே ஆம்புலன்ஸ்களுக்கு தடை ஏற்படுத்துகின்றனர். அப்படி அலட்சியமாக நடந்து கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நபர்களுக்கு மத்தியில் ஐதராபாத்தை சேர்ந்த போக்குவரத்து காவலர் ஒருவர், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பாதை ஏற்படுத்தி தருவதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஓடியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஐதராபாத் நகரில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் பாப்ஜி. இவர் கடந்த திங்கள் கிழமை மாலை கோட்டி அருகே வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஆனால் மாலை நேரம் என்பதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் கடுமையாக இருந்தது.

எனவே ஆம்புலன்ஸ் வாகனத்தால் அப்பகுதியை கடக்க முடியவில்லை. சூழ்நிலையை புரிந்து கொண்ட போக்குவரத்து காவலர் பாப்ஜி உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்னால் ஓட தொடங்கினார். அவர் முன்னால் ஓடி சென்று மற்ற வாகனங்களை ஒதுக்கி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினார். இவ்வாறு அவர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து காவலர் பாப்ஜி எந்த பலனையும் எதிர்பாராமல்தான் இந்த நல்ல காரியத்தை செய்திருக்க கூடும். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உள்ளே இருந்த ஒருவர், போக்குவரத்து காவலர் பாப்ஜி முன்னால் ஓடி வழி ஏற்படுத்தும் காட்சியை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். அந்த காணொளி வேகமாக பரவி, போக்குவரத்து காவலர் பாப்ஜிக்கு பாராட்டுகளை பெற்று தந்து கொண்டுள்ளது.
பொதுமக்கள் மட்டுமல்லாது காவல் துறை உயரதிகாரிகளும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் சைரன் ஒலி கேட்டும் வாகன ஓட்டிகள் ஏன் தாங்களாகவே ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தவில்லை என ஒரு சிலர் சமூக வலை தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். வாகன ஓட்டிகளின் மனநிலை மாற வேண்டும் எனவும், ஆம்புலன்ஸ்களுக்கு சரியான முறையில் வழி விட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








