வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை... போலீசுக்கு செக் வைத்த அதிரடி உத்தரவு... என்னவென்று தெரியுமா?
வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்துவதாக எழுந்த புகார்களையடுத்து, காவல் துறைக்கு அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் அபராத தொகைகள் மிகவும் கடுமையாக இருப்பதால், மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்துடன் அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை பயன்படுத்தி கொண்டு வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

எனவே புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் மேற்கு வங்கமும் ஒன்று. மேற்கு வங்க மாநிலத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மேற்கு வங்க மாநில அரசு தற்போது மற்றொரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

வாகன தணிக்கை என்ற பெயரில், போலீசார் வசூல் வேட்டை நடத்துவதாக போக்குவரத்து சங்கங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தரப்பில் மேற்கு வங்க மாநில அரசுக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றன. எனவே அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு மேற்கு வங்க அரசு தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

செக்கிங் என்ற பெயரில், வாகன ஓட்டிகள் துன்புறுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில், பல்வேறு வழிகாட்டுதல்களை மேற்கு வங்க அரசு வழங்கியுள்ளது. இதன்படி சீருடையில் உள்ள காவலர்கள் மட்டுமே வாகனங்களின் ஆவணங்களை பரிசோதிக்கவும், சலான்களை வழங்கவும் முடியும். இதுமட்டுமல்லாது வாகன தணிக்கை நடைபெறும் சமயத்தில், மோட்டார் வாகன ஆய்வாளரும் உடன் இருக்க வேண்டும்.

போக்குவரத்து துறையில் இருந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் உடன் இருப்பதால், வாகன ஓட்டிகள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என அம்மாநில அரசு கருதுகிறது. அதே சமயம் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க சலான் புத்தகம் அல்லது இ-சலான் இயந்திரத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஹோம் ஹார்டுகள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்க கூடாது எனவும் மேற்கு வங்க அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் திடீரென விசிட் அடித்து இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர கேமராக்களை அணிந்து பணியாற்றும்படியும் காவல் துறையினர் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு விடும். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''74 புதிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை வேலைக்கு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் முடிவடைந்த பிறகு அவர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்படும். அதன்பின் அவர்கள் போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்'' என்றனர். மேற்கு வங்க அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அம்மாநிலத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








