ஹெல்மெட் போடாததற்காக இளைஞரின் நெற்றியில் போலீஸ் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...
தலை கவசம் அணியாமல் வந்ததற்காக, இளைஞரின் நெற்றியில் காவல் துறையினர் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் தலை கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருந்து வருகிறது. ஆனால் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் பலர் இந்த விதிமுறையை கடைபிடிப்பதில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.

கார்களில் ஏர்பேக் மற்றும் சீட் பெல்ட் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இருக்கும் நிலையில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் முதன்மையான பாதுகாப்பு அம்சமே தலை கவசம் மட்டும்தான். எனவே தலை கவசத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதையும் மீறி தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டாய தலை கவச விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு மட்டுமே காவல் துறையினருக்கு அதிகாரம் உள்ளது.

எனினும் காவல் துறையினர் சில சமயங்களில் வாகன ஓட்டிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்துகின்றனர். இதன் உச்சகட்டமாக தலை கவசம் அணியாமல் வந்த ஒரு இளைஞரின் நெற்றியில் இரு சக்கர வாகனத்தின் சாவியை காவல் துறையினர் குத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. காவல் துறையின் இந்த செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் நகரில், நேற்று முன் தினம் (ஜூலை 27) இரவு சுமார் 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரகாண்ட் காவல் துறையின் நகர ரோந்து பிரிவை சேர்ந்த காவல் துறையினர், இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணியாமல் வந்த ஒரு இளைஞரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அப்போது காவல் துறையினருக்கும், அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காவல் துறை அதிகாரி ஒருவர், அந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த சாவியை எடுத்து அந்த இளைஞரின் நெற்றியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த சம்பவத்தின் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. நெற்றியில் குத்தப்பட்ட சாவியுடன் ரத்தம் சொட்ட சொட்ட அந்த இளைஞர் நிற்கும் காட்சிகள் அந்த காணொளியில் பதிவாகியுள்ளன. எனவே போலீசாரின் நடவடிக்கைகளுக்கு சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

முன்னதாக சம்பவம் நடைபெற்ற உடனேயே உள்ளூர் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து, காவல் துறையினருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ருத்ராபூர் காவல் நிலையத்தின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதால், ருத்ராபூர் தொகுதியின் எம்எல்ஏ ராஜ்குமார் துக்ரால் சம்பவ இடத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் தனது தொகுதியில் இருந்து நகர ரோந்து பிரிவை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருப்பதாகவும் தெரிகிறது. பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணையை தொடங்கியுள்ளதாக காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் காவல் துறையினர் மூன்று பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு இந்த நடவடிக்கை மட்டும் போதாது, இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் கருத்து கூறப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








