இதற்காக எல்லாம் வாகன ஓட்டிகளை நிறுத்த கூடாது... கர்நாடகா டிஜிபி அதிரடி உத்தரவு... தமிழ்நாட்லயும் போட்டா பரவால!
கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சோதனையிடுவதற்காக மட்டும் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்துவதாக தற்போது புகார்கள் எழுந்து வருகின்றன. வாகன ஓட்டிகள் எந்தவிதமான போக்குவரத்து விதிமுறை மீறல்களிலும் ஈடுபடாதபோதும், ஆவண சோதனை என்ற பெயரில், அவர்கள் தடுத்து நிறுத்தி விசாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இது தொடர்பான புகார்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட சூழலில், ஆவணங்களை சோதனை செய்வதற்காக மட்டும் எந்த வாகன ஓட்டிகளும் தடுத்து நிறுத்தப்படக்கூடாது என டிஜிபி தற்போது மீண்டும் ஒரு முறை அறிவித்துள்ளார். கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி-யான பிரவீன் சூட்தான் இந்த உத்தரவை தற்போது மீண்டும் ஒரு முறை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலை தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், ''பிரவீன் சூட் போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையராக இருந்தபோது, ஆவணங்களை சோதனை செய்வதற்காக மட்டும் வாகன ஓட்டிகள் நிறுத்தப்படுவதை தடை செய்திருந்தார். குற்ற செயல்கள் ஏதாவது செய்தால் மட்டுமே வாகன ஓட்டிகள் நிறுத்தப்படலாம்.

ஆனால் தற்போது பிரவீன் சூட் மாநில காவல் துறையின் டிஜிபி-யாக இருக்கும் நிலையில், ஆவணங்களை பார்வையிடுவதற்காக மட்டும் வாகனங்களை நிறுத்துவது என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக மாறி விட்டது'' என கூறப்பட்டிருந்தது. இந்த பதிவிற்கு, கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி பிரவீன் சூட் பதில் அளித்துள்ளார்.

அவரது பதிலில், ''நான் மீண்டும் வலியுறுத்தி கொள்கிறேன். கண்களுக்கு புலப்படும் வகையிலான போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடாத வரை, வெறுமனே ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் எந்தவொரு வாகனமும் நிறுத்தப்பட கூடாது. இந்த விதிமுறையை உடனடியாக செயல்படுத்தும்படி, பெங்களூர் காவல் ஆணையர், பெங்களூர் காவல் இணை ஆணையர் (போக்குவரத்து) ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளோம்'' என கூறப்பட்டுள்ளது.

எனவே பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இனிமேல் வெறுமனே ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி விசாரிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக நீங்கள் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடலாம் என அர்த்தம் கிடையாது.

கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி பிரவின் சூட் சமூக வலை தளத்தில் கூறியுள்ளதன்படி, போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியை காவல் துறையினர் நிறுத்தி விசாரிக்கலாம். அபராதம் விதிப்பது உள்பட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் வாகனங்களை நிறுத்த கூடாது. அவ்வளவுதான்.

எனவே போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக கடைபிடியுங்கள். இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது (இருவரும்), கார்களில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவது (அனைவரும்), போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரியும்போது, அதனை மீறி செல்லாமல் இருப்பது உள்பட அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றும்பட்சத்தில், சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனினும் கர்நாடக போலீஸ் டிஜிபி பிரவீன் சூட் தற்போது மீண்டும் பிறப்பித்துள்ள உத்தரவின் மூலம், வாகன ஓட்டிகளின் நேரம் தேவையில்லாமல் விரயமாக்கப்படுவதும், அவர்கள் தேவையற்ற மன உளைச்சல்களுக்கு ஆளாகப்படுவதும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆவணங்கள் பரிசோதனை என்ற பெயரில், காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் குறையலாம்.

எனவே தமிழகம் உள்பட மற்ற மாநில காவல் துறை உயர் அதிகாரிகளும், ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் வாகன ஓட்டிகளை நிறுத்த கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இது நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








