டெஸ்லா கார்களில் செல்வோரை குறிவைத்து பிடிக்கும் போலீஸார்!! அதிரடி நடவடிக்கையில் சீனா!
டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை பற்றிய செய்திகள் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் சில செய்திகள் சீனாவை சேர்ந்தவையாகும்.

சமீபத்தில் கூட சீனாவில் சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்ற போது சாலையின் பக்கவாட்டில் இருந்த தடுப்பு சுவரில் தீப்பிடித்து எரிந்த டெஸ்லா காரை பற்றி பார்த்திருந்தோம். இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

சீனாவில் மட்டுமின்றி சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா, டெக்ஸாஸ் மாகாணத்தில் சாலைக்கு அருகே இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளான ஆளில்லா இயங்கும் டெஸ்லா காரில் பயணித்த இருவர் தீயில் கருகி பலியாகினர்.

இந்த நிலையில் சீனாவில், குவாங்சோ நகரத்தை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் இயங்கிய தங்களது கார்கள் போலீஸாரால் நிறுத்தப்பட்டுள்ளதாக சில டெஸ்லா கார் உரிமையாளர்கள் சீன சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவுடன் தெரிவித்துள்ளனர்.
குவாங்சோ நகரத்தில் தான் சமீபத்தில் சாலை தடுப்பு சுவரில் மோதி டெஸ்லா கார் விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இந்த குறிப்பிட்ட சீன நகரில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை தற்போது போலீஸார் நிறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் உண்மையில் போலீஸாரின் இத்தகைய நடவடிக்கைகளால் டெஸ்லா கார் உரிமையாளர்களே தங்களது எலக்ட்ரிக் காரின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் உடனடியாக இந்த பிரச்சனை குறித்த தனது நிலைப்பாட்டை டெஸ்லா நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

டுவிட்டரை போன்று சீனாவில் பிரபலமான வெய்போ தளத்தில் டெஸ்லா வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், வாடிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்காக, மூன்றாம் தரப்பு மதிப்பீட்டு நிறுவனம் அல்லது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தொழிற்நுட்ப குழுவிற்கு முழுமையாக ஒத்துழைத்து வாகனத்தின் மூல தரவுகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என கூறியுள்ளது.

இத்தனை வீடியோக்கள் வெளியான பின்பும், குறிப்பாக டெஸ்லா கார்கள் மட்டும் நெடுஞ்சாலைகளில் அதிகாரிகளால் தடுக்கப்படுவதை உள்ளூர் காவல் துறை மறுத்துள்ளது. மாறாக, போக்குவரத்து நிர்வாகத்தின் நலனுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

போலீஸாரின் இந்த பதில் டெஸ்லா கார் உரிமையாளர்களின் கேள்விகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் குவாங்சோ நெடுஞ்சாலைகளில் டெஸ்லா கார் உரிமையாளர்களினால் கூச்சல், குழப்பங்களும், அவர்களது கார்கள் வரிசையாக நிற்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.

சீனாவில் கார்கள் மட்டுமின்றி எந்தவொரு விஷயத்திலும் தரம்-கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை அங்குள்ள அதிகாரிகள் உன்னிப்பாக கவனிப்பர். ஒரு உயிரிழப்பிற்கு காரணமான விபத்து நடந்து சில வாரங்கள் மட்டுமே ஆகிறது, ஆனால் அதற்குள் உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் கார்களை நெடுஞ்சாலைகளில் தடை செய்யும் அளவிற்கு அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்றால் பார்த்து கொள்ளங்கள்...


Click it and Unblock the Notifications








