தவறு செய்த அழகிக்கு சரியான பாடம் கற்பித்த காவல்துறை.. இப்படி ஒரு தொழிலை பார்த்து இவ்ளோ கார்கள வாங்கினாங்களா!!
நாட்டையே உலுக்கும் வகையில் ஓர் பண மோசடி சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறி இருக்கின்றது. இளம் பெண் ஒருவர் தன்னுடைய பணக்கார தோற்றத்தைப் பயன்படுத்தி மிகப் பெரிய பண மோசடி சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றார். இவரின் முக்கிய குறிக்கோளே மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டுமே ஆகும். இவர்களை குறி வைத்தே தன்னுடைய மோசடி காயை நகர்த்தி இருக்கின்றார். தன்னை ஓர் அவர் பாஜக பிரமுகரின் உறவினர் என கூறியே அவர் பணக்காரர்களை மோசடி செய்து இருக்கின்றார்.
குறிப்பாக, தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டர்களுக்கு உடனடியாக அனுமதி பெற்று தருவதாக கூறியே பல கோடி ரூபாயை அந்த பெண் மோசடி செய்திருக்கின்றார். ஹன்சிதா அபிலிப்சா, இவரே அந்த மோசடி ராணி ஆவார். இவருக்கு துணையாக மோசடிக்கு அணில் குமார் என்பவர் உதவியாக இருந்திருக்கின்றார்.

மோசடி செய்த பணத்தில் மிகப் பெரிய ஆடம்பர வாழ்க்கையை இவர்கள் இருவரும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். குறிப்பாக, ஆடம்பர கார்களை மூன்றுக்கும் அதிகமாக அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த வாகனம் மற்றும் மோசடி செய்த பணத்தில் வாங்கிய சொத்துக்கள் ஆகியவற்றையும் ஒடிசா காவல்துறை தற்போது பறிமுதல் செய்திருக்கின்றது.
ஏமாற்றிய பணத்தில் இந்த பெண் போர்ஷே (Porsche), ஜாகுவார் (Jaguar) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) சொகுசு கார்களை பயன்படுத்தி வந்தது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மூன்று கார்களின் மதிப்பு மட்டுமே ரூ. 5 கோடியை நெருங்கும்.
மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்ட கார்களே இவை என்பது தெரிய வந்திருக்கின்றது. எனவே இந்த கார்களையும், அவர்களிடத்தில் இருந்த மற்ற வாகனங்களையும் தற்போது காவல்துறை பறிமுதல் செய்திருக்கின்றது. மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்றால் பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான சொகுசு கார்களில் ஃபேன்சி பதிவெண்ணே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
'7777' என்கிற எண்ணே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய வாகனங்களையே தற்போது சிறப்பு குற்றப் பிரிவு பறிமுதல் செய்து இருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் மிகப் பெரிய ஆடம்பர வாழ்க்கையை ஒடிசாவைச் சேர்ந்த ஹன்சிதா அபிலிப்சா வாழ்ந்திருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.

அம்பானி, அதானி மற்றும் பெரும் கோடீஸ்வர நடிகர்களே இதுபோன்று ஒரே பதிவெண்ணை தங்களின் அனைத்து கார்களிலும் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரியான ஓர் நபராகவே தன்னை பொதுவெளியில் தன்னுடைய கார் மற்றும் பதிவெண்கள் வாயிலாக அவர் காண்பித்திருக்கின்றார். இவற்றை வைத்தே இவர் பெரும் செல்வந்தர் மற்றும் பாஜக பின்புலம் கொண்டவர் என நம்பி பல கோடி ரூபாய்களை லஞ்சமாக கொடுத்து சிலர் ஏமாந்திருக்கின்றனர்.
இதுவரை சுமார் ரூ. 100 கோடி வரை இந்த ஜோடிகள் ஏமாற்றி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இவற்றை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே ஒடிசாவின் சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு வாகனங்கள் இவர்களிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் இப்போது மீட்கப்பட்டு இருக்கும் வாகனங்களில் சிலவற்றை ரகசிய இடங்களில் இருந்தே மீட்டெடுத்திருக்கின்றனர். ரூ. 1.85 கோடி மதிப்புள்ள பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரை காவல்துறை ரகசிய இடத்தில் இருந்தே மீட்டெடுத்திருக்கின்றனர். ஆகையால், இன்னும் வேறெங்காவது இவர்களுக்கு சொந்தமாக வாகனம் மற்ற சொத்துக்கள் இருக்கின்றனவா என்கிற ஆராய்ச்சியில் போலீஸார் களமிறங்கி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பென்ஸ் ஜிஎல்இ, போர்ஷே பனமேரா, ஜாகுவார் எக்ஸ்எஃப் செடான் ஆகிய கார் மாடல்களே ஆகும். இந்த கார் ஒவ்வொன்றும் ரூ. 1 கோடிக்கும் அதிகமான விலைக் கொண்டவை ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த கார்களை ஏமாற்று தொழில் வாயிலாக பெண் மோசடியாளர் வாங்கியிருக்கின்றார் என்பது பெருத்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








