யூ-டியூபரின் பைக்கை தூக்கீட்டு இன்ஸ்பெக்டர் செய்த காரியம்! பெத்தவங்களை இதுக்கு மேல அசிங்கப்படுத்த முடியாது!
யூ-டியூப் (YouTube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற தளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. இந்த ஆசையில் ஒன்றும் தவறில்லைதான். ஆனால் வேகமாக பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் செய்து வரும் காரியங்கள்தான் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.
சமூக வலை தளங்களுக்கான வைரல் வீடியோக்களை (Viral Videos) உருவாக்க வேண்டும் என்பதற்காக பொது சாலைகளிலேயே தற்போது பலர் பைக் ஸ்டண்ட்களை (Bike Stunts) செய்து வருகின்றனர். இதில் ஒரு சில பைக் சாகசங்கள், சாலை விபத்துக்களை ஏற்படுத்த கூடிய வகையில் மிகவும் அபாயகரமானவையாக இருக்கின்றன.

காவல் துறையினர் எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், ஒரு சிலர் அடங்குவதாக தெரியவில்லை. இந்த அடங்க மறுக்கும் வகையறாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல் துறை வசம் தற்போது சிக்கியுள்ளார். அவரை காவல் துறை அதிகாரி ஒருவர் கையாண்ட விதம், அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில், பொது சாலையில் இளைஞர் ஒருவர் சமீபத்தில் பைக்கில் சாகசங்களை செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களுக்காக அவர், விதிமுறைகளை மீறி பொது சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் இதனை கவனித்துள்ளனர்.
உடனடியாக அந்த இளைஞரை மடக்கி, அவரது பைக்கை காவல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. காவல் துறையிடம் சிக்கிய இளைஞர், யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைக்கை பறிமுதல் செய்ததுடன், காவல் துறை நின்று விடவில்லை.
மாறாக அந்த இளைஞருக்கு புத்திமதி கூறியுள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பிடிபட்ட இளைஞருக்கு அறிவுரை வழங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. ''உங்கள் பெற்றோர், உங்களை பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் போலீஸ்காரர்களான நாங்கள் அப்படி இருக்க மாட்டோம்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே உங்கள் பைக்கை பறிமுதல் செய்கிறோம்'' என அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், பிடிபட்ட இளைஞருக்கு அறிவுரை வழங்குவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. இதன் மூலம் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தன்னுடைய நடவடிக்கையால் ஒரே ஒரு வீடியோவின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ள அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் பெயர் சுதிர் குமார் என்பது தெரியவந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிவேகத்தில் பைக் ஓட்ட முயன்ற யூ-டியூபர்கள் சிலர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். இத்தகைய விபரீத முயற்சியின்போது உயிரிழப்புகளும் கூட நிகழ்ந்துள்ளன. எனவே பொது சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவது மற்றும் சாகசங்களை செய்வது ஆகியவற்றை இளைஞர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவை எல்லாம் சட்டத்தை மீறும் செயல் என்பதை மனதில் கொள்ளுங்கள். அத்துடன் இவை பயங்கரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தலாம். பைக் ஸ்டண்ட் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தால், முறையாக பயிற்சி எடுத்து கொண்டு செய்யலாம். ஆனால் தனியார் இடங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில்தான் செய்ய வேண்டும். அப்போது பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் முறையாக அணிந்திருப்பதும் அவசியம்.


Click it and Unblock the Notifications








