லம்போர்கினி, ஃபெராரி கார்கள் மிக மலிவான விலையில் விற்பனை! தந்தை, மகன் சிக்கியதற்கு காரணம் இதுதான்...
மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி, ஃபெராரி கார்களை மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்து வந்த தந்தை, மகன் போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லம்போர்கினி மற்றும் ஃபெராரி ஆகிய இரண்டு உலகப்புகழ் பெற்ற கார் நிறுவனங்களை அறியாதவர்கள் எவரும் நிச்சயம் இருக்கவே முடியாது. இத்தாலியை சேர்ந்த இவ்விரு நிறுவனங்களும் அதிசக்தி வாய்ந்த லக்ஸரி ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வருகின்றன. லம்போர்கினி, ஃபெராரி நிறுவன கார்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் இவர்களில் ஒரு சிலரால் மட்டுமே லம்போர்கினி மற்றும் ஃபெராரி கார்களின் உரிமையாளர்களாக மாற முடிகிறது. மற்ற அனைவரும் ரசிகர்களாகவே வாழ்க்கையை கடத்தி விடுகின்றனர். காரணம் விலை. ஆம், லம்போர்கினி மற்றும் ஃபெராரி நிறுவன கார்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே சாமானியர்கள் இந்த கார்களின் உரிமையாளர்கள் ஆவது கடினமே.

எனினும் லம்போர்கினி மற்றும் ஃபெராரி கார்களின் உரிமையாளர்கள் ஆக வேண்டும் என்ற இப்படிப்பட்ட சாமானியர்களின் கனவை நிறைவேற்ற முயன்ற தந்தை மற்றும் மகன் இருவரும் தற்போது போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளனர். ஒரு நல்ல காரியம் செய்ததற்கு தண்டனையா? என அவசரப்பட்டு எந்தவொரு முடிவுக்கும் வந்து விட வேண்டாம்.

அவர்கள் விற்பனை செய்தது போலி லம்போர்கினி மற்றும் போலி ஃபெராரி கார்கள்! இந்த விபரீத சம்பவம் நடைபெற்றிருப்பது பிரேசிலில். சுமார் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 லட்சம்) போலி லம்போர்கினி, ஃபெராரி கார்களை அவர்கள் விற்பனை செய்துள்ளனர். பிரேசிலில் விற்பனை செய்யப்படும் உண்மையான லம்போர்கினி, ஃபெராரி கார்களின் விலையில் இது பத்தில் ஒரு பங்கு மட்டுமே!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலமாக விளம்பரம் செய்து, மிகவும் குறைவான விலையில் போலியான லம்போர்கினி, ஃபெராரி கார்களை அவர்கள் விற்பனை செய்து வந்துள்ளனர். போலியான கார்களை உற்பத்தி செய்வதற்காக பிரேசில் நாட்டின் சாண்டா கட்டரினா மாகாணத்தில் தொழிற்சாலை ஒன்றையும் அவர்கள் நிறுவியுள்ளனர்.

இது தொடர்பாக பிரேசிலை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தரப்பில், போலீசாரிடம் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் அந்த தொழிற்சாலைக்குள் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். அப்போது அங்கிருந்த 6 போலி லம்போர்கினி, 2 போலி ஃபெராரி என மொத்தம் 8 போலியான கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில், சில கார்களின் பணி ஏற்கனவே பாதி முடிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் இன்னும் சில கார்களின் பணி அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. யார் தலையில் கட்டுவதற்காக இந்த போலி கார்களை அவர்கள் உற்பத்தி செய்து கொண்டிருந்தனரோ தெரியவில்லை. நல்ல வேளையாக போலீசார் அதிரடியாக நுழைந்து அதனை தடுத்து விட்டனர்.

இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் இருக்கை மற்றும் பானெட்டில் லம்போர்கினி மற்றும் ஃபெராரி நிறுவனங்களின் லோகோக்கள் போலியாக பொருத்தப்படுகின்றன. அதே சமயம் வேறு கார்களின் இன்ஜின்கள் பொருத்தப்பட்டு, லம்போர்கினி மற்றும் ஃபெராரி கார்கள் என விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

பொதுவாக லம்போர்கினி மற்றும் ஃபெராரி நிறுவன கார்களின் இன்ஜின்கள் அதிசக்தி வாய்ந்தவை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். பெர்ஃபார்மென்ஸ் என்ற விஷயத்தில், அவற்றை அடித்து கொள்ளவே முடியாது. ஆனால் இந்த போலி கார்களில் பொருத்தப்படும் இன்ஜின்கள் அவற்றுடன் ஒப்பிடும்போது மிகவும் சக்தி குறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பதற்கு அச்சு அசலாக லம்போர்கினி கலர்டோ, லம்போர்கினி ஹூராகேன் மற்றும் ஃபெராரி 430 ஆகிய கார்களை போலவே தோற்றமளிக்கும் போலி கார்கள் அந்த தொழிற்சாலையில் இருந்தன. இவற்றை உருவாக்க பயன்படுத்திய கருவிகள் மற்றும் உபகரணங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் லம்போர்கினி, ஃபெராரி நிறுவனங்களின் லோகோக்களுடன் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்த இருக்கைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையை நடத்தி வந்த தந்தை, மகன் இருவரிடமும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை எத்தனை பேருக்கு இவ்வாறான போலி கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது? என்பது இன்னும் தெரியவில்லை.
இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பிரேசிலை சேர்ந்த O Globo என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய கால கட்டத்தில், உங்கள் கற்பனைக்கு எட்டாத வகையில் அனைத்து பொருட்களிலும் போலிகள் ஊடுருவி விட்டன. நீங்கள் கூடுதல் கவனமாக இல்லாவிட்டால் உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.
Image Courtesy: Policia Civil de Santa Catarina


Click it and Unblock the Notifications








