சென்னை- இலங்கை சொகுசு கப்பல் டிக்கெட் விலை இவ்ளோதானா! குடும்பத்தோட கடலில் ஜாலி ட்ரிப் போக செம சான்ஸ்
சென்னையிலிருந்து இலங்கைக்கு வரும் ஜூன் மாதம் 5ம் தேதி தனியார் சொகுசு கப்பல் ஒன்று இயக்கப்படவுள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங் துவங்கியுள்ளது. 4 இரவு 5 பகல் என இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தின் கீழ் கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் படி கடல் வழியாகச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகத் தனியார் பயணிகள் கப்பலுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்படி இந்தியாவிற்குள்ளேயே மாநிலம் விட்டு மாநிலமும், வெளிநாடுகளுக்கும் கடல் வழியாகப் பயணத்தைச் செய்ய முடியும்.

இந்நிலையில் சென்னையிலிருந்து இலங்கை ரூட்டில் சுற்றுலாப் பயணிகள் கப்பலை இயக்க கார்டெல்லா என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது தனது எம்பிரஸ் என்ற கப்பலைச் சென்னையிலிருந்து இலங்கை வரை இயக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி 4 இரவுகள் 5 பகல் என இந்த கப்பல் பயணம் இருக்கும்.
வரும் ஜூன் மாதம் 5ம் தேதி சென்னையில் துவங்கும் இந்த பயணம், அம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் துறை, யாழ்ப்பாணம், கொழும்பு வரை சென்று மீண்டும் சென்னை திரும்புகிறது. இந்த சொகு கப்பலில் பயணிப்பதற்கான டிக்கெட் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பயணத் திட்டத்தின்படி ஜூன் மாதம் 5ம் தேதி மாலை 6 மணிக்குச் சென்னை துறைமுகத்திலிருந்து இந்த கப்பல் கிளம்புகிறது. 7ம்தேதி காலை 7 மணிக்கு அம்பன் தோட்டாவிற்கு சென்றடையும் பின்பு அங்கிருந்து கிளம்பி 8ம் தேதி காலை 8 மணிக்குத் திரிகோண மலைப் பகுதியைச் சென்றடையும், பின்னர் அங்கிருந்து கிளம்பி 9ம் தேதி 12 மணிக்குச் சென்னையை வந்து சேரும்.
இந்த பயணத்திற்கு மொத்தம் 5 வகையான ரூம்களுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. ஒரு தம்பதியாகப் பயணிக்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ1.06 லட்சம் முதல் டிக்கெட் விற்பனையாகிறது. அதிகபட்சமாக ரூ4.37 லட்சம் என்ற விலையிலான டிக்கெட்டும் விற்பனையாகிறது. இந்த கப்பலில் மொத்தம் 1600 பேர் பயணிக்க டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கப்பல் சென்னை- இலங்கை இடையே பயணிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தாக சென்னை - கொச்சி - மும்பை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மற்றொரு வழித் தடத்திற்கும் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் சுற்றுலா மேம்படுத்தப்படும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. தொடர்ந்து விசாகபட்டிணம், கொல்கத்தா ஆகிய பகுதிகளையும் இணைக்க ஏற்பாடு நடக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடல் வழி சுற்றுலா என்பது நீண்ட ஆண்டுகளாக நவீனத்துவப்படுத்தப்படாமல் இருக்கிறது. மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் இது சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இதை மேம்படுத்தப்பட வேண்டும். மேலும் மாநிலத்திற்குள்ளேயே 24 மணி நேரத்திற்குக் குறைவான சுற்றுலா திட்டங்களையும் கொண்டு வர ஊக்கப்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications









