கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிரடி... காவல் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, காவல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 (Covid-19) வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் (Coronavirus) குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19, சுமார் 164 நாடுகளை தாக்கியுள்ளது. கோவிட்-19 வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது வரை கோவிட்-19 வைரஸ் தாக்கியதால், உலகம் முழுவதும் 10,047 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 2,45,859 பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொண்டுள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மனித உயிர்களை கொத்து கொத்தாக பறிப்பதுடன், உலக பொருளாதாரத்தையும் கோவிட்-19 வைரஸ் ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் எல்லைகளுக்கு 'சீல்' வைத்துள்ளன. இதனால் பல்வேறு நிறுவனங்களின் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச பயணங்களை மேற்கொள்வதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அத்துடன் உள்நாட்டிற்கு உள்ளேயும் கூட எங்குமே பயணம் செய்ய வேண்டாம் எனவும், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளும்படியும், மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து துறை மட்டுமல்லாது, பஸ், ரயில் உள்பட ஒட்டுமொத்த போக்குவரத்து துறையே ஸ்தம்பித்து போயுள்ளது. நிலைமை எப்போது சீராகும் என்பது உறுதியாக தெரியவில்லை.

சீனா, இத்தாலி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் கோவிட்-19 வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் தற்போது வரை நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் கூட, இங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு உறுதுணையாக மாநில அரசுகளும் இயங்கி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதுடன், பொதுமக்கள் ஒன்று கூடவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்திய, மாநில அரசுகள் இதுபோல் எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் அவசியம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கோவிட்-19 வைரஸை விரட்டியடிக்க முடியும். இந்த சூழலில், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக டெல்லி காவல் துறை அதிரடியான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி டெல்லியில் தற்காலிகமாக ப்ரீத் அனலைசர் டெஸ்ட்களை காவல் துறையினர் செய்ய மாட்டார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுவதுதான், இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக வாகன ஓட்டிகள் மது அருந்தியிருப்பதாக சந்தேகம் எழுந்தால், காவல் துறையினர் அவர்களை ஊத சொல்லி கண்டறிவார்கள். அத்துடன் பிரீத் அனலைசர் டெஸ்ட்டும் மேற்கொள்ளப்பட்டு, வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே ப்ரீத் அனலைசர் டெஸ்ட்களை செய்யும் முடிவு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக சந்தோஷப்படாதீர்கள். கோவிட்-19 வைரஸ் எவ்வளவு ஆபத்தானதோ, குடிபோதையில் வாகனங்களை இயக்குவதும் அதே அளவிற்கு ஆபத்து நிறைந்ததுதான். நீங்கள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டினால், உங்களுடன் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே இதனை மனதில் வைத்து கொண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய சோதனைகள் செய்யப்படாது என டெல்லி போலீசார் அறிவித்திருந்தாலும் கூட, இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. அதாவது வழக்கமாக அனைவரிடமும் செய்யப்படும் சோதனைகள்தான் செய்யப்படாது.

ஆனால் பார்த்த உடனேயே இவர் மது அருந்தியுள்ளார் என்ற சந்தேகம் எழுந்தாலோ அல்லது மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கண் மூடித்தனமாக வாகனங்களை ஓட்டினாலோ அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதுவும் சாத்தியமுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன்தான் சோதனை செய்யப்படும்.

காவல் துறையினருக்கும், மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, மது அருந்தாமல் வாகனங்களை இயக்குவதுதான் நல்லது. இதனை வாகன ஓட்டிகள் அனைவரும் உணர்ந்தால், பாதிப்புகளை வெகுவாக தவிர்க்க முடியும். குடிபோதையில் வாகனங்களை இயக்கும்போது, நமது செயலாற்றும் திறன் குறைந்து விடுகிறது. இதனால் சாலை விபத்துக்கள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








