கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிரம்... அதிரடி காட்டும் தமிழக அரசு... வெளியானது முக்கிய அறிவிப்பு...
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 உலகையே ஆட்டி படைத்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது முற்றிலும் முடங்கி போயுள்ளது. கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 21,293 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோவிட்-19 வைரஸால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

இதில், சீனா மட்டும் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சீனாவிற்கு வெளியே தற்போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக மாநில அரசுகளும் பணியாற்றி வருகின்றன. இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு, ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்.

ஆனால் ஒரு சிலர் ஊரடங்கு உத்தரவை காதில் போட்டு கொள்வதாக தெரியவில்லை. அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ஒரு சிலர் தேவையே இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். அத்தியாவசிய பணிகளுக்காக ஒரு சிலர் வெளியில் வந்தாக வேண்டிய தேவை உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

ஆனால் ஒரு சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் உலா வருகின்றனர். அதுவும் மாஸ்க் மற்றும் கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களையும் அவர்கள் அணிவதில்லை. 21 நாள் ஊரடங்கை விடுமுறை காலம் என அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்களா? என்பதை தெரியவில்லை. இப்படி தேவையில்லாமல் வெளியே உலா வருபவர்கள் சிலரின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாயின.

எனவே இத்தகைய வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஏற்ப தேவையில்லாமல் வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் அபராதங்களும் விதிக்கப்பட்டன. இந்த சூழலில், தமிழக அமைச்சர் அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதன்படி தேவை இல்லாமல் வெளியே சுற்றி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் எம்.சி.சம்பத் இந்த அதிரடி அறிவிப்பை நேற்று (மார்ச் 25) வெளியிட்டார். இதன்படி காரணமே இல்லாமல் வெளியில் சுற்றி வருபவர்களின் வாகனங்கள் இன்று (மார்ச் 26) முதல் பறிமுதல் செய்யப்படும்.

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் இந்த எச்சரிக்கையை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர். இதன் மூலம் தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. தற்போது சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால், ஒரு சிலர் அதை பயன்படுத்தி கொண்டு ஜாலி ரைடு செல்ல நினைக்கின்றனர்.

இது விடுமுறை காலம் அல்ல என்பதையும், சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதையும் அவர்கள் அனைவரும் உணர வேண்டும். அரசின் எச்சரிக்கையை மீறி வெளியே சுற்றியதால்தான் ஒரு சில நாடுகளில் கோவிட்-19 வைரஸ் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக வெளியாகும் தகவல்களை வாகன ஓட்டிகள் எண்ணி பார்க்க வேண்டும்.

அதே சமயம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராத சூழலை உருவாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், வீடுகளில் இருந்து வெளியே வருவதை மக்கள் தவிர்ப்பார்கள். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications








