அனாதையாக கிடக்கும் 35 ஆயிரம் கோடி... உள்ளே இருப்பது என்னனு தெரியுமா? லாரி டிரைவர்கள் திக்... திக்...
திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக நடுவழியில் சிக்கி கொண்டுள்ள லாரி டிரைவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில், கோவிட்-19 வைரஸ் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியா முழுவதும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேவையில்லாமல் மக்கள் வாகனங்களில் வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்திய சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. அதே சமயம் திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக லாரி டிரைவர்கள் பலர் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

சரக்குகளை ஏற்றி கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்த லாரி டிரைவர்கள் பலர் தற்போது ஆங்காங்கே சிக்கி தவித்து வருகின்றனர். லாரிகளில் அவர்கள் ஏற்றி சென்ற சரக்குகளும் அப்படியே அந்தந்த இடங்களில் தேங்கியுள்ளன. புதிய கார்கள், இரு சக்கர வாகனங்கள், டிவி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பொருட்கள் தற்போது நடுவழியில் சிக்கி கொண்டுள்ளன.

அவற்றின் மதிப்பு தோராயமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமாராக 3.5 லட்சம் லாரிகள் தற்போது நடுவழியில் சிக்கி கொண்டிருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த லாரிகளின் டிரைவர்கள், உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சாலைகளில் தவித்து வருகின்றனர்.

நெடுஞ்சாலைகள், குடோன்கள் மற்றும் தொழிற்சாலைகளின் வெளி பகுதிகளில் லாரி டிரைவர்கள் சிக்கி கொண்டுள்ளனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் மட்டும் அல்லாது, ரசாயனங்கள், சிமெண்ட், இரும்பு போன்ற சரக்குகளை ஏற்றி சென்ற லாரிகளும் நடுவழியில் சிக்கி கொண்டுள்ளன. அந்த லாரிகளினுடைய டிரைவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் உணவை வைத்துதான் அவர்கள் உயிர் பிழைத்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள ஒரு சில தாபாக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது குறைந்த எண்ணிக்கையில்தான் தாபாக்கள் இயங்கி வருகின்றன.

அந்த தாபா நிர்வாகங்கள் அதிக விலை வைத்து உணவை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. அவற்றை வாங்குவதற்கு தேவையான பணம் லாரி டிரைவர்கள் மற்றும் க்ளீனர்களிடம் இல்லை. இருக்கும் பணமும் கரைந்து கொண்டே வருவதால், என்ன செய்வது? என தெரியாமல் லாரி டிரைவர்களும், க்ளீனர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இதுதவிர லாரிகளின் சிறிய கேபினில் படுத்து தூங்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கழிப்பிடம் மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு இல்லை. இவை எல்லாம் தவிர சரக்குகள் திருடப்பட்டு விடுமோ? அல்லது சேதப்படுத்தப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தையும் லாரி டிரைவர்களிடம் பார்க்க முடிகிறது.

மத்திய அரசு பிறப்பித்த 21 நாள் ஊரடங்கு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், லாரி டிரைவர்கள் மற்றும் க்ளீனர்களின் நிலைமை இன்னும் மோசம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே என்ன செய்வது? என தெரியாமல், லாரி டிரைவர்கள் தற்போது கையை பிசைந்து வருகின்றனர்.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications








