உணவு மட்டுமல்ல... இக்கட்டத்தில் தவித்த கிராம மக்களுக்கு ஓடி வந்து உதவும் மாருதி... ரொம்ப நல்ல மனசு
ஊரடங்கு உத்தரவால் தவித்து வரும் கிராம மக்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. கோவிட்-19 வைரஸின் தாயகம் என கருதப்படும் சீனாவில், மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி கொண்டிருந்தாலும், சீனாவிற்கு வெளியே தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில், அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனமும் தற்போது இந்த பணிகளில் இணைந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராம மக்களுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருட்களை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கி வருகிறது.

ஹரியானா மாநிலம் மனேசர் மற்றும் குர்கானில் உள்ள மக்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. குர்கான் மற்றும் மனேசரில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலையில் உள்ள கேன்டீன் தற்போது உணவு தயாரிக்கப்ப பயன்படுத்தப்படுகிறது.

அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, அந்த உணவு வழங்கப்படுகிறது. இதனுடன் கூடுதலாக மனேசர் மற்றும் குர்கானில், 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மதிய மற்றும் இரவு உணவாக வழங்கப்படுகின்றன. அத்துடன் மனேசரில் உள்ள 5 கிராமங்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனத்தால் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.

இதுதவிர அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 500 கிட்களை ஒவ்வொரு நாளும் மாருதி சுஸுகி நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. இதில், அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், சோப், சர்க்கரை மற்றும் மற்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், மாருதி சுஸுகி மட்டுமல்லாது, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் களத்தில் இறங்கியுள்ளன. அரசுகளுக்கு நிதி உதவிகளை அளிப்பது, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்வது ஆகியவற்றுடன் மட்டுமல்லாது, வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும் பணிகளிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா வைரஸை எதிர்த்து போரிட மாஸ்க், வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இதனால் அவற்றை தயாரித்து வழங்கும்படி உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள் விடுத்த கோரிக்கையை, உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் ஏற்று கொண்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications