மாட்டு வண்டியில் தன்னை பூட்டி கொண்டு 25 கிமீ இழுத்து சென்ற இளைஞர்... காரணத்தை கேட்டு கலங்கும் மக்கள்
இளைஞர் ஒருவர் மாட்டு வண்டியில் தன்னை தானே பூட்டி கொண்டு 25 கிமீ இழுத்து சென்ற சம்பவம் இந்தியாவையே கண் கலங்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19), உலக மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இன்று சரியாகி விடும், நாளை சரியாகி விடும் என நம்பி கொண்டிருந்த நாம் தற்போது கொரோனா வைரசுடன் வாழ்ந்து பழகி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். சீனாவின் வுஹானில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19, உலக பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

இதனால் பல லட்சக்கணக்கானோர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் தினக்கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் வேலையை பறிகொடுத்துள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, இந்த அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைந்திருக்க வேண்டிய இந்த ஊரடங்கு, கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால், பின்னர் மே 3 மற்றும் மே 17ம் தேதி வரை என நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக தொழில்கள் அனைத்தும் முடங்கியதால், தினக்கூலி தொழிலாளர்கள் பலர் தங்கள் வேலையை இழக்க நேரிட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஒரு சிலருக்கு பல மாநிலங்களை கடந்து சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதே சமயம் ஒரு சிலர் மாநிலத்திற்கு உள்ளேயே மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக பேருந்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளும் இயங்குவதில்லை. இப்படி பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி கிடப்பதால், ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை நடந்தே கடந்து வருகின்றனர். இன்னும் சிலர் சைக்கிள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். நடந்தும், சைக்கிளிலும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் தொழிலாளர்கள் பற்றிய உருக்கமான செய்திகள் தினந்தோறும் வெளி வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது. இளைஞர் ஒருவர் தன் குடும்பத்தை சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் வைத்து இழுத்து சென்றுள்ளார். அந்த வண்டியின் ஒரு பக்கத்தில் மாட்டை பூட்டிய அவர், மறுபக்கத்தை தன் தோளில் சுமந்தபடி சென்ற நிகழ்வு பலரை கண் கலங்க செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர்தான் இந்த நெகிழ்ச்சிகரமான காரியத்தை செய்துள்ளார். இவர் அதே மாநிலத்தில் உள்ள மோவ் எனும் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். உடன் அவரது தந்தை, தங்கை, அண்ணன், அண்ணி ஆகியோரும் வசித்து வந்தனர். ராகுல் குடும்பத்தை கவனித்து கொண்டு தினக்கூலி வேலை செய்து வந்தார்.

ஆனால் ஊரடங்கு காரணமாக ராகுல் வேலையை இழக்க நேரிட்டதால், அவரது குடும்பம் பட்டியின் தவிக்கும் சூழல் உருவானது. ஆனால் ராகுல் மாட்டு வண்டி ஒன்றை வைத்துள்ளார். அந்த வண்டியை இழுப்பதற்கு பயன்படுத்திய 2 மாடுகளில் ஒன்றை, கையில் பணம் இல்லாத காரணத்தால் அவர் விற்பனை செய்து விட்டார். இதன் மூலம் அவருக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது.

பொதுவாக காளை மாட்டை விற்பனை செய்தால், 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அவசரம் என்பதால், கிடைத்த விலைக்கு மாட்டை அவர் விற்பனை செய்து விட்டார். ஆனால் இந்த பணமும் செலவாகி விட்டதால், தனது சொந்த ஊருக்கே குடும்பத்துடன் சென்று விடுவது என ராகுல் முடிவெடுத்தார்.

இந்தூர் அருகே உள்ள நயதா முன்டலாதான் அவரது சொந்த ஊர். எனினும் பொது போக்குவரத்து சேவைகள் எதுவும் இல்லாததால், எப்படி செல்வது? என தெரியாமல் ராகுல் விழி பிதுங்கி நின்றார். அந்த நேரத்தில்தான் மாட்டு வண்டியிலேயே சென்று விடலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றியது. ஆனால் அவரிடம் ஒரு மாடுதான் இருந்தது.

எனவே அந்த ஒரு மாட்டை வண்டியின் ஒரு பக்கத்தில் பூட்டி விட்டு, மற்றொரு பக்கத்தை தன் தோளிலேயே சுமந்தபடி தன் குடும்பத்தை அந்த வண்டியில் அமர வைத்து இழுத்து சென்றுள்ளார் ராகுல். சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் அவர் இப்படி மாட்டு வண்டியை இழுத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையிலேயே இது பெரிய விஷயம்தான்.
ராகுலின் குடும்பத்தில் சிலரும் அவ்வப்போது சிறிது தூரம் வண்டியை மாற்றி இழுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பெரும்பாலான தூரம் ராகுல்தான் வண்டியை இழுத்து சென்றுள்ளார். அதுவும் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தன் குடும்பத்திற்காக இப்படி ஒரு காரியத்தை செய்த ராகுலுக்கு உண்மையிலேயே பெரிய மனசுதான்.
இடம்பெயரும் தொழிலாளர்கள் பற்றிய இத்தகைய செய்திகள் தினந்தோறும் வெளியாகி கொண்டிருப்பதால் தற்போது சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அத்துடன் ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக, ஒரு சில இடங்களில் டாக்ஸிகளின் சேவையும் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications