அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார்
தமிழ்நாடு போலீசார் தெறி விஜய்யாக மாறி தரமான சம்பவத்தை செய்துள்ளனர்.

கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் இன்று மனிதர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது வரை உலகம் முழுவதும், 24,117 பேரின் உயிரை பறித்துள்ளது. அத்துடன் 5,37,017 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளே கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றன. மேற்கண்ட நாடுகளில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள் தேவையே இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி கொண்டுள்ளனர்.

இத்தகைய வாகன ஓட்டிகளுக்கு எதிராக நாடு முழுவதும் காவல் துறையினர் கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். நிலைமையின் தீவிரத்தை கொஞ்சம் கூட உணராமல், பைக், கார்களில் ஜாலியாக ஊர் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது, வழக்கு பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

இன்னும் சில இடங்களிலோ போலீசார் பேசுவதில்லை. அவர்களின் லத்திதான் பேசுகிறது. வாகன ஓட்டிகளை போலீசார் அடித்து விளாசும் வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் வெளியே வந்தது எதற்காக? என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்பது சிலரின் கருத்து.

இதில், உண்மை இருக்கவே செய்கிறது. அத்தியாவசிய பணிகளுக்காக வெளியில் வரும் சில வாகன ஓட்டிகள் கூட போலீசாரின் அடி தாங்க முடியாமல் கதறுவதை காண முடிகிறது. வாகன ஓட்டிகள் மீது காவல் துறை இப்படி ஆக்ரோஷம் காட்டி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட போலீசார் சூப்பரான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், களியக்காவிளை, குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வை தேர்வை போலீசார் நடத்தினர். இதற்காக 10 கேள்விகள் அடங்கிய வினாத்தாளை அவர்களிடம் கொடுத்தனர்.

கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது? கொரோனா தொற்று அறிகுறி என்ன? சமூக விலகல் என்றால் என்ன? கொரோனா வைரஸ் ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்ததால், அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடு எது? என்பது போன்று மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில், கொரோனா வைரஸின் காதலியின் பெயர் என்ன? என்ற கேள்விதான் ஹைலைட்டே.

இதில், ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் 10 தோப்புக்கரணம் போட வேண்டும். அதாவது 5 கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் 50 தோப்புக்கரணம் போட வேண்டும். இதன்படி எவ்வளவு கேள்விகளுக்கு வாகன ஓட்டிகள் தவறாக பதில் அளித்தனரோ, அதற்கு ஏற்ப போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு உறுதி மொழியும் எடுக்க வைத்தனர்.

அத்துடன் 10 கேள்விகளுக்கான சரியான பதில்களையும், தேர்வின் முடிவில் போலீசார் அவர்களுக்கு கூறினர். இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்பது போலீசாரின் கருத்து. உண்மையில் இது வரவேற்க வேண்டிய ஒரு நடவடிக்கைதான். தெறி படத்தில் விஜய் ரவுடிகளிடம் ஆசிரியராக மாறுவது போன்று, தற்போது கன்னியாகுமரி போலீசார் வாகன ஓட்டிகளுக்கு ஆசிரியராக மாறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








