சூப்பர் சார்... இந்த மாதிரி தொழிலதிபர்தான் நாட்டுக்கு வேணும்! மக்களுக்காக களத்தில் இறங்கிய மஹிந்திரா
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, மக்களுக்கு எக்கச்சக்கமான உதவிகளை அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 14,687 பேரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்துள்ளது.

அத்துடன் 3,38,724 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாயகம் என கூறப்படும் சீனா தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளும்படி மக்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் வெளியில் பயணம் செய்வதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் மட்டுமின்றி, ரயில், பஸ் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பொருளாதார ரீதியாகவும், கொரோனா வைரஸ் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, இந்தியாவில் நேற்று (மார்ச் 22ம் தேதி) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில், மிகப்பெரிய தொழில் நிறுவனங்களும் களம் இறங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா தற்போது அதிரடியான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதன்படி மஹிந்திரா குழுமம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளை தொடங்கவுள்ளது. மேலும் மஹிந்திரா ஹாலிடே ரிசார்ட்ஸ் வசதிகள், தற்காலிக சிகிச்சைகளுக்கு வழங்கப்படவுள்ளன. மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால், தங்களது சொந்த தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளை உடனடியாக தொடங்கும்படி, மஹிந்திரா குழுமத்திற்கு ஆனந்த் மஹிந்திரா அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக தனது 100 சதவீத சம்பளத்தையும் ஆனந்த் மஹிந்திரா வழங்கவுள்ளார்.

எனவே ஆனந்த் மஹிந்திராவை சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் போன்ற மிக அபாயகரமான பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாட்டிற்கு, வலுவான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. மருத்துவ உபகரணங்களும் அதிக அளவில் தேவைப்படும். இதனால்தான் ஆனந்த் மஹிந்திரா இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளதாவது: தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அத்துடன் நம்மிடம் வென்டிலேட்டர்களின் பற்றாக்குறையும் காணப்படுகிறது. முன்னெப்போதும் சம்பவிக்காத இந்த அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு தேவைப்படுகின்ற உதவிகளை மஹிந்திரா குழுமம் வழங்கும்.

இதன் ஒரு பகுதியாக மஹிந்திரா குழும தொழிற்சாலைகளில், வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளை நாங்கள் உடனடியாக தொடங்குவோம். இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். இதே போன்று கனடாவில் உள்ள வாகன தொழிற்சாலைகளிலும், மருத்துவ உபகரணங்களை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் எதிரொலியால் தற்போது வாகனங்களின் உற்பத்தி சரிவடைந்து கொண்டுள்ளது. இதனால் வாகனங்களின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்கள் தொழிற்சாலைகளில் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில்தான் கனடா இந்த முடிவை எடுத்துள்ளது.

மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கனடா அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அதே பாணியில், மஹிந்திரா குழுமமும் தற்போது தங்களது தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களை தயாரிக்க முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.


Click it and Unblock the Notifications








