வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... க்ரீன் சிக்னல் கொடுத்த டொனால்டு டிரம்ப்... அதிரடி ஆட்டம் ஆரம்பம்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் இன்று அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் வுஹான் நகரை தாயகமாக கொண்டதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவை பலமாக தாக்கிய இந்த வைரஸ், இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளையும் ஒரு வழி ஆக்கியுள்ளது.

கண்ணுக்கு தெரியாத இந்த எதிரியை எதிர்த்து உலக நாடுகள் போரிட்டு வருகின்றன. ஆனாலும் தற்போது வரை உலகம் முழுவதும் 16,591 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது. இதுதவிர 3,84,527 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருவதும், தற்போது வரை அதற்கு அதிகாரப்பூர்வமான மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததுமே பலி எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சத்திற்கு காரணம். கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மக்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான போக்குவரத்து துறை முற்றிலும் முடங்கி போயுள்ளது. எனவே விமான போக்குவரத்து துறையில் ஏராளமானோர் வேலையிழக்க கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. விமான போக்குவரத்து துறை உள்பட ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையே தற்போது முடங்கி போயுள்ளது.

வாகனங்களின் விற்பனை கடும் சரிவாலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்கள் தொழிற்சாலைகளில் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. ஆனால் வாகன தொழிற்சாலைகளில், மருத்துவ உபகரணங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் அனைத்து நாடுகளிலும் தற்போது மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கனடாவில் உள்ள வாகன தொழிற்சாலைகளில் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கனடா அரசு உதவி செய்யும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை மஹிந்திரா நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி மஹிந்திரா குழும தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களின் உற்பத்தி தொடங்கப்படவுள்ளது. மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதனை அறிவித்தார். இந்த வரிசையில் ஃபோர்டு, ஜிஎம் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட வாகன நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யவுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) கடந்த புதன்கிழமையன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில், மருத்துவ உபகரணங்களின் சப்ளையை அதிகரிக்கும்படி சீனா மற்றும் இதர நாடுகளுடன் பேசியுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதே சமயம் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் பேசி வருவதாக கூறியிருந்தன.

இந்த சூழலில்தான், வென்டிலேட்டர்கள் மற்றும் தேவைப்படும் மற்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்க, ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதன்மையான இடத்தில் உள்ளது.

அப்படிப்பட்ட அமெரிக்காவே கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாக வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அங்கு மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இதனை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அத்துடன் மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை மக்கள் வழங்குவது அவசியம். அப்போதுதான் கொரோனா வைரஸை விரட்டியடிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








