கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிரடி... அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய முடிவு... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, டெல்லி அரசு ஒரு சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19 தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால், உலகம் முழுவதும் தற்போது வரை 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இது தவிர சுமார் 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கோவிட்-19 வைரஸை குணப்படுத்த தற்போது வரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே நேரத்தில், அந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஐடி உள்பட தனியார் நிறுவனங்கள் பலவும், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளன. மேலும் அரசாங்கமும் மக்கள் ஒன்றுகூட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த சூழலில், கோவிட்-19 பரவுவதை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து விவாதிக்க டெல்லி மாநில அரசு கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''டெல்லி அரசின் அனைத்து வேலைகளையும், மிக அவசியமானது மற்றும் அவசியமற்றது என இரண்டு வகைகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அவசியமற்ற பணிகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பழகுனர் உரிமங்களை வழங்குவது அவசியமற்ற வகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே பழகுனர் உரிமங்களை வழங்கும் பணி நிறுத்தப்படலாம்'' என்றார். கூட்டம் கூடுவதை தவிர்ப்பதன் மூலமாக கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே டெல்லியில் உள்ள 13 ஆர்டிஓ அலுவலகங்களில், பழகுனர் உரிமங்களை வழங்குவது உள்பட பல்வேறு சேவைகள் விரைவில் நிறுத்தப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ''போக்குவரத்து துறையால் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான பழகுனர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இதில், பாதிக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். ஆனால் தற்போது பழகுனர் உரிமங்களை வினியோகம் செய்வதை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஏனென்றால் டெஸ்ட்களை பொறுத்தவரையில், பயோமெட்ரிக் ஸ்கேன்களை தொடுவது மற்றும் டச் ஸ்க்ரீன் கம்ப்யூட்டர்களில் ஆன்லைன் டெஸ்ட் ஆகியவை அடங்குகின்றன. அவற்றில் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பழகுனர் உரிமங்களை வினியோகிப்பதை தற்போதைக்கு தள்ளிப்போடுவதுதான் அனைவருக்கும் நல்லது.

ஏனென்றால் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் டெஸ்ட்டை முடித்த பிறகு, கீ-போர்டுகள், மவுஸ், டச்ஸ்க்ரீன்கள் ஆகியவற்றை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம். எனவே இந்த பணிகளை எல்லாம் ஒரு சில வாரங்களுக்கு தள்ளி வைத்து விடுவது நல்லது. இதுகுறித்து வெகு விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என்றனர்.

பழகுனர் உரிமங்களை வழங்குவதை நிறுத்துவதை போன்றே, ஆர்டிஓ அலுவலகங்களில் இன்னும் பல்வேறு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கோ அல்லது குறைக்கப்படுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








