கடவுள் சார் நீங்க... மிக மிக மலிவான விலையில் உயிர் காக்கும் கருவி... உலகையே அசத்தும் நம்ம மஹிந்திரா
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மிக மிக மலிவான விலையில் உயிர் காக்கும் கருவியை இந்தியாவின் மஹிந்திரா அறிமுகம் செய்கிறது.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் தற்போது வரை 21,353 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 4,74,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள்தான் கோவிட்-19 வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் உலகம் முழுவதும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. கோவிட்-19 வைரஸ் காரணமாக, வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிந்துள்ளது. இதனாலும், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவும் பல்வேறு நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய முன்வந்துள்ளன. இதன்படி கனடாவில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அரசு உதவும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதேபோல் ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளன.

இதற்கான அனுமதியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில்தான் வழங்கினார். இந்தியாவை பொறுத்தவரை, மஹிந்திரா குழுமம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளது. மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

இதன்படி மஹிந்திரா குழும தொழிற்சாலைகளில் உடனடியாக வென்டிலேட்டர்களின் உற்பத்தியை துவங்க வேண்டும் என ஆனந்த் மஹிந்திரா அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கோவிட்-19 வைரஸின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக தனது 100 சதவீத சம்பளத்தை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்புகளுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இந்த சூழலில், மஹிந்திரா குழுமம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதில் தற்போது புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தற்போது 2 பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் ஏற்கனவே உயர் ரக வென்டிலேட்டர்களை தயாரித்து வருகின்றன.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா இந்த தகவலை கூறியுள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு வெளியிட்ட ஒரு சில நாட்களில் மேற்கண்ட தகவல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைக்கால உயிர்காக்கும் கருவி 7,500 ரூபாய் என்ற விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் அதிநவீன இயந்திரங்களின் விலை 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வென்டிலேட்டரின் புரோட்டோடைப் இன்னும் மூன்று நாட்களில் அனுமதிக்காக தயார் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளே திணறுவதை நாம் காண முடிகிறது.

அப்படி இருக்கையில் இந்தியாவில் நிலைமை விபரீதமானால் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்படும். அப்படி ஒரு நிலைமை இந்தியாவில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஊரடங்கு உத்தரவு போன்ற பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களின் தேவையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் உதவி செய்ய முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. இதனிடையே இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு 2 கோடி ரூபாய் நிதியை நன்கொடையாக அறிவித்துள்ளது. இந்த நிதியில் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








