கொரோனாவால் நிலைகுலைந்த வல்லரசுகள்... உலகிற்கே பாடம் நடத்தும் நவீன் பட்நாயக்! மனுஷன் தூள் கௌப்புறாரு
கொரோனா வைரஸால் வல்லரசு நாடுகளே நிலைகுலைந்து போயுள்ள சூழலில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உலகிற்கே பாடம் நடத்தி வருகிறார்.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்பட்டு வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளும், கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போயுள்ளன. பொதுமக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வரும் நிலையில், அதை தடுக்க முடியாமல், உலகின் வல்லரசு நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. மருத்துவ வசதிகளில் தலைசிறந்து விளங்கும் நாடுகளிலேயே மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வென்டிலேட்டர்கள் மற்றும் என்-95 மாஸ்க் போன்றவற்றுக்கு மிக கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்கான முயற்சிகளை, மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தரப்பில், வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை தீவிரம் அடைவதால், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசுக்கு முன்னதாகவே, ஒடிசா மாநில அரசு ஊரடங்கை நீட்டித்து விட்டது. ஒடிசாவில் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே லாக்டவுனை நீட்டித்த முதல் மாநிலமாக ஒடிசா உருவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் தற்போது வரை 48 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது எப்படி? என்பதில் உலகின் வல்லரசு நாடுகளுக்கே ஒடிசா பாடம் நடத்தி வருகிறது என்றால் மிகையல்ல. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதே, கொரோனா வைரஸை வெல்வதற்கான மிகச்சிறந்த வழி என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒடிசா அதை கச்சிதமாக செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஒடிசா வருவோம் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இதனை அறிவிக்கவே செய்கின்றன. ஆனால் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு 15வது நாளில் 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 4 மாதங்களுக்கான அரிசி, 4 மாதங்களுக்கான முதியோர் உதவி தொகை, நடைபாதை வியாபாரிகள் மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு, ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதித்து விடாமல் பார்த்து கொண்டு வருகிறது ஒடிசா மாநில அரசு.

இந்த வரிசையில் ஒடிசாவில் தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசிய பணிகளுக்காக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டியிருந்தால், மாஸ்க் அணிய வேண்டும் என்பதை ஒடிசா மாநில அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதல் மூன்று முறை மீறினால் தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்பும் தொடர்ந்து மீறி கொண்டே இருந்தால் ஒவ்வொரு முறைக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இதற்கு உறுதுணையாக ஒடிசா மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதன்படி மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளுக்கு இனி பெட்ரோல், டீசல் நிரப்பப்படாது. மாஸ்க் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே இனி எரிபொருள் நிரப்பப்படும். ஒடிசா முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இந்த அதிரடி திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையும் பாராட்டுக்குரிய ஒன்றுதான்.

ஒடிசா மாநிலம் முழுவதும் தோராயமாக 1,600 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. அவை அனைத்திலும் இந்த அதிரடி திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், அத்தியாவசியமானது என்பதால், பெட்ரோல் பங்க்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது மாஸ்க் அணிவதன் காரணமாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கோ, வாகன ஓட்டிகள் மூலம் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கோ கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும். ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே எரிபொருள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு இதற்கு முன்னதாக இந்தியாவின் பல பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் மாஸ்க் இல்லாவிட்டால் எரிபொருள் நிரப்பப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் மட்டுமல்லாது, மளிகை மற்றும் காய்கறி கடை உரிமையாளர்களும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இல்லாவிட்டால் அவர்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.

பொதுவாக மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. இதனால் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்வதில் ஒடிசா மிகுந்த அனுபவத்தை பெற்று விளங்குகிறது. கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொள்வதிலும் அந்த அனுபவம் அவர்களுக்கு கைகொடுக்க கூடும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








