சூப்பர்... கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு ஓடி ஓடி உதவும் பிரபல நிறுவனத்தின் சிஇஓ... யார் தெரியுமா?
கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு, பிரபல நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் ஓடி ஓடி உதவி வருகிறார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இது, சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. சீனா தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்தாலும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருவதால், உலகின் பல்வேறு நாடுகளிலும், மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக அனைத்து நாடுகளுக்கும் வென்லேட்டர்கள்தான் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன. நோயாளிகளின் சுவாச மண்டலத்தை கோவிட்-19 வைரஸ் தாக்குவதால், வென்டிலேட்டர்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது.

எனவே வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களை உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் வலியுறுத்தியுள்ளன. கோவிட்-19 வைரஸ் எதிரொலியால் தற்போது வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை.

இதனால் வாகனங்களின் விற்பனை வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் வாகன தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியாலும், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசுகள் விடுத்த கோரிக்கையை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்று கொண்டுள்ளன.

எனவே வாகனங்களின் உற்பத்தி நடைபெற்ற தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா, ஃபோர்டு மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் என உலகின் முன்னணி வாகன நிறுவனங்கள், வென்டிலேட்டர் தயாரிப்பு பணிகளில் களமிறங்கியுள்ளன. இந்த சூழலில் வென்டிலேட்டர்களை வழங்கும்படி எலான் மஸ்க்கிடம் உக்ரைன் கேட்டுள்ளது.

தங்கள் நாட்டில் இருக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களை சப்ளை செய்யும்படி டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்கிடம் உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவரான டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க், கடந்த செவ்வாய் கிழமை ட்விட் ஒன்றை செய்திருந்தார்.

இதில், எஃப்டிஏ-வால் அங்கீகரிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள், தனது டெஸ்லா நிறுவனத்திடம் கூடுதலாக இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். அத்துடன் உடனடியாக வென்டிலேட்டர்களை தேவைப்படும் எந்தவொரு நாட்டிற்கும் அவற்றை அனுப்ப தயாராக இருப்பதாகவும் அந்த ட்விட்டில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

எனவே அமெரிக்காவில் உள்ள உக்ரைன் தூதரகம் அந்த வென்டிலேட்டர்களை தங்களுக்கு தரும்படி கேட்டு கொண்டுள்ளது. ''மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது. எனவே எங்களுக்கு தாருங்கள்'' என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. கோவிட்-19 வைரஸ் உக்ரைனிலும் தற்போது தனது உக்கிரத்தை காட்ட தொடங்கியுள்ளது.

குறிப்பாக உக்ரைனில் நடப்பு ஏப்ரல் மாதம் மிக கடினமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற நாடுகளை போன்று உக்ரைனும் வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. வென்டிலேட்டர்களை வழங்குவதில் எலான் மஸ்க்கும் தற்போது முனைப்புடன் செயலாற்றி வருகிறார்.

முன்னதாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளுக்கு எலான் மஸ்க் வென்டிலேட்டர்களை டெலிவரி செய்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கும் தற்போது வென்டிலேட்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. எனவே இந்தியாவின் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications