ஒரு வருட ஓய்வு... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது காதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்... இது ட்ரெயின் இவ்ளோ ஸ்பெஷலானதா!!
காதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒரு வருட ஓய்விற்கு பின்னர் மீண்டும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரயில் நாட்டின் மிக முக்கியமான ரயில்களில் ஒன்றாகும். அதிவேக ரயிலும்கூட. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய காரணத்தினால் நாடு முழுவதும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.

இதனால், பல ரயில்கள் தற்போதும் பணிமனையில் இயக்கமற்றநிலையில் முடங்கிக் கிடக்கின்றன. அவ்வாறு, முடக்க நிலையில் இருந்த ரயில்களில் கதிமான் எக்ஸ்பிரஸ்-ம் ஒன்று. இந்த ரயிலையே கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது இந்திய ரயில்வேதுறை அமைச்சகம்.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இன்று முதல் கதிமான் ரயில் பயன்பாட்டிற்கு வந்திருப்பதாகவும், அது வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் பெருவாரியான சுற்றுலாத்தலங்கள் முடங்கி கிடக்கின்றநிலையில் அவற்றிற்கு புத்துணர்ச்சி வழங்கும் வகையில் கதிமான் ரயிலை மீண்டும் ரயில்வே அமைச்சகம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றது. கதிமான் எக்ஸ்பிரஸ் 12050 மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் 12049 என்ற பெயரில் இயங்கும் இந்த ரயில்குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ரயில் நேரங்கள்:
கதிமான் ரயில் வாரம் ஆறு நாட்கள் இயங்கக்கூடிய ரயில் ஆகும். ஹஸ்ரத் நிஜாமுதீன் (NZM) ரயில் நிலையத்தில் தொடங்கி ஜான்சி சந்திப்பு வரை பயணிக்கின்றது. ஒட்டுமொத்தமாக 403 கிமீ தூரம் இடைவெளிக் கொண்டதே இந்த ரயில் வழித் தடம். இவ்விரு ரயில் நிலையங்களுக்கும் இடையில் ஆக்ரா சிஏஎன்டிடி மற்றும் குவாலியர் ஆகிய இரு நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும்.

நிஜாமுதீனில் காலை 8.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஏஜிசி ரயில்நிலையத்தை 09.50 மணிக்கும், குவாலியர் ரயில் நிலையத்தை 11.13 மணிக்கும் வந்து சேரும். கடைசியாக ஜான்சி சந்திப்பை 12.35 மணிக்குள் வந்து சேர்ந்துவிடும். ஒட்டுமொத்தமாக நான்கரை மணி நேரங்களில் 403 கிமீ இடைவெளியை கதிமான் ரயில் கடந்துவிடுகின்றது.

ரயிலின் சிறப்பு வசதிகள்:
கதிமான் ரயில் உச்சபட்சமாக மணிக்கு 160கிமீ எனும் பயணிக்கக் கூடியது. எனவேதான் நாட்டின் மிக வேகமான ரயில்களில் ஒன்றாக தற்போது இந்த ரயில் இருக்கின்றது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இந்த ரயில் மணிக்கு 130 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கின்றது. ஆக்ரா-ஜான்சி சந்திப்பு இதற்கிடையில் இருக்கும் இருப்புப்பாதை சற்று வலுவற்றது என்கின்ற காரணத்தினால் இந்த பகுதியிலேயே கதிமான் ரயில் 130 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றது.

இந்த ரயில் அதிக பாதுகாப்பானது என்ற சான்று பெற்றிருக்கின்றது. அக்டோபர் 2014ம் ஆண்டு இந்த சான்று ரயிலுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக இந்த ரயில் ஹஸ்ரத் நிஜாமுதீன் முதல் ஆக்ரா வரை மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு பின்னரே 2018ம் ஆண்டில் இதன் சேவை குவாலியர் வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக 2018 ஏப்ரல் மாதம் ஜான்சி வரை இதன் சேவை நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை இந்த ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலில் அதிக சொகுசான இருக்கை, வெல்கம் பெண்கள் என பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு ரயிலே ஒரு வருட காலத்திற்கு பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








