உயிரை துச்சமென நினைத்து களத்தில் இறங்கிய 25 பெண்கள்.. சூடுபிடிக்கும் கொரோனாவிற்கு எதிரான போராட்டம்..
தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து 25 பெண்கள் கோரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக ஆட்டோக் காரர்கள் என்றவுடன் அதிக கட்டணம் வசூலிப்பது, சந்து பொந்துகளின் இடுக்கில் புகுந்து செல்வது, ரூட் (முகவரி) சொல்வது இதுபோன்ற குறிப்பிட்ட சில செயல்கள் மட்டுமே நம்முடைய நினைவுக்கு வரும்.
ஆனால், பல ஆட்டோக்காரர்கள் இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு உதவி செய்வது, பிரசவகாலத்தில் இலவசமாக ஆட்டோவை இயக்குவது மற்றும் தன்னுடைய ஆட்டோவில் தவறவிட்ட பொருட்களை உரியவரிடத்திலேயே கொண்டுபோய் சேர்ப்பது என பல வியத்தகு காரியங்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால், இம்மாதிரியான நற்செயல்கள் பெருமளவில் நம் நினைவுக்கு வருவதில்லை. மாறாக ஆட்டோக்காரர்களை நாம் எப்போதும் ஓர் வில்லனாகவே சித்தரித்து வருகின்றோம். இருப்பினும், குறிப்பிட்ட நல்ல ஆட்டோ டிரைவர்கள் அவர்களின் பொது சேவையை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்துவதில்லை.

இந்நிலையில் உலக வல்லரசு நாடுகள், பெரும் அறிவியல் விஞ்ஞானிகளே கொரோனா வைரஸைக் கண்டு நடுநடுங்கிக் கொண்டிருக்கின்ற வேலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மக்களை காப்பாற்றுவதற்காக தங்களின் உயிரையும் துச்சமென நினைத்து சிறப்பு சேவை வழங்க இருக்கின்றனர்.

தற்போது நாடு முழுவதும் 144 தடை நிலவுகின்றது. இதனால் ஒட்டுமொத்த நாடே முடங்கி நிற்கின்றது. குறிப்பாக, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால், மக்கள் தங்களின் அவசர காலத்திற்குகூட 108 ஆம்புலன்ஸை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உள்ளது.

இந்தநிலையில், வழக்கமான செக்-அப் போன்றவற்றிற்கு சென்று வருவது மிகவும் கடினமானதாக மாறியிருக்கின்றது. தனிப்பட்ட வாகனத்தில் சென்றாலும் போலீஸார் கண் மூடித் தனமாக, யார் சுற்றி திரியும் நபர்கள், யார் மருத்துவர்கள், யார் நோயாளி என்பதைக்கூட கேட்டறியமால் தாக்கி வருகின்றனர்.

இம்மாதிரியான சூழ்நிலையில் நோயாளிகள் வெளியில் செல்வது மிகவும் சிரமமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த அவலநிலையை போக்குவதற்காக மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே நகராட்சி ஓர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது.

இதன்மூலம், அவசர காலத்தில் உதவி செய்வதற்காக 25 ஆட்டோக்களை அது நிர்ணயித்துள்ளது. இது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். நோயாளிகளை மருத்துவமனை அழைத்து செல்ல மற்றும் திரும்பி வீடு கொண்டுவந்து சேர்ப்பதற்கு மட்டுமே இது உதவும். இந்த சேவை கடந்த சனிக்கிழமையில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தில் நம்மை நாமே தற்காலத்துக் கொள்வது கட்டாயமாகியிருக்கின்றது. இதன்காரணமாகவே மக்கள் வெளியில் நடமாடக் கூடாது என்பதற்காக பொதுபோக்குவரத்து வாகனங்களின் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது.
ஆகையால், இதுபோன்ற சூழ்நிலையில் மக்களின் அவசர காலத்தில் உதவுவதற்காக 25 ஆரஞ்சு நிற ஆட்டோக்கள் தானே நகர பகுதியில் களமிறக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆட்டோக்கள் அனைத்தையும் பெண் ஓட்டுநர்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட இருக்கின்றது என்பது கூடுதல் சிறப்பு. இந்த சேவை நகரத்தின் முக்கிய பகுதிகளான கோப்ரி, வேகில் எஸ்டேட், கேட்பரி ஜங்சன், மஜிவடா, கபுர்பாவாடி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும். மேலும், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை மட்டுமே இந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் என தான நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

மக்கள் பலர் கொரோனா குறித்த அறியாமையால் வழக்கம்போல் நடமாடி வருகின்றனர். இதுபோன்ற செயல்களினால் தற்போது இத்தாலி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பின் விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. இதே நிலை இந்தியாவில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றன.

இதன் வெளிப்பாடாகவே தேவையற்ற நடமாட்டங்களைக் குறைக்கும் பொது பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட ஆட்டோக்களை தானே நகராட்சி களமிறக்கியுள்ளது. இந்த ஆட்டோ சேவையைப் பயன்படுத்தி சொந்தக்காரர்கள் அல்லது நண்பர்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹோம் டூ மருத்துவமனை, மருத்துவமனை டூ ஹோம் இதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக 9967312176 என்ற சிறப்பு தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு அழைத்தால் ஆட்டோ வீட்டு வாசலுக்கே வந்து மருத்துவமனை அழைத்துச் செல்லும்.

தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனாவின் தாக்கம் 7 லட்சத்திற்கும் அதிகமாக காணப்படுகின்றது. அமெரிக்காவில் 1,31,403 பேர், இத்தாலியில் 97,689 பேர், சீனாவில் 81,439 பேர், ஸ்பெயின் நாட்டில் 78,799 பேர், ஜெர்மனியில் 60,659 பேர், ஈரானில் 38,309 பேர், பிரான்ஸில் 37,575 பேர், பிரிட்டனில் 19,592 பேர், சுவிஸ் 14,829 பேர் உயிர் கொல்லி வைரஸான கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பக்கம் மலமலவென உயர்ந்து எண்ணிக்கை இருக்க மறுபக்கம் கொரோனா பாதிப்படைந்தவர்கள் குணமடையும் நிகழ்வும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், இதுவரை 1.49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம், உலகளவில் 33,178 பேர் இதுவரை கொரோனாவால் பரிதாபமாக உயிரந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








