நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் அரசு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதில், கோவா மாநிலமும் ஒன்று. கோவாவில் அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கிய பிறகு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதன்பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட, பொதுமக்களும் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த செயல்முறை படிப்படியாக நடைபெற்றது. ஆனால் கோவா மாநிலத்தில் பேருந்துகளில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு மாறாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பொதுமக்கள் விரும்புகின்றனர். இதனால் பேருந்து பயணிகள் எண்ணிக்கை மிக கடுமையாக குறைந்து வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சமே இதற்கு காரணம். பேருந்துகளில் பயணம் செய்தால், பிறர் மூலமாக தொற்று ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற அச்சத்தால், மக்கள் சொந்த வாகனங்களை அதிகமாக விரும்புகின்றனர். இதனால் கடம்பா போக்குவரத்து கழகம் (Kadamba Transport Corporation Ltd - KTC) கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

இது கோவா மாநில அரசுக்கு சொந்தமானது ஆகும். இது குறித்து கடம்பா போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் வெறும் 25 சதவீத பயணிகளுடன் மட்டும்தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

உண்மையில் தற்போதைய நாட்களில் மக்கள் அதிகமாக வெளியே வருவதில்லை. சராசரியாக ஒவ்வொரு பேருந்திலும் 10 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். இதுவும் கூட பீக் ஹவரில் மட்டும்தான். மற்ற நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் குறைந்து விடுகிறது. சனிக்கிழமைகள் என்றால், பயணிகளின் எண்ணிக்கை இன்னும் குறைந்து காணப்படுகிறது.

அன்றைய தினம் அரசு ஊழியர்களும் அவ்வளவாக பயணம் செய்ய மாட்டார்கள் என்பதால், இப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது. தற்போதைய நிலையில் தினமும் 175 முதல் 180 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. ஆனால் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னால் 350 பேருந்துகள் வரை இயக்கப்பட்டது'' என்றனர்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்துகளுக்கான தேவை குறையும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதற்கு பதிலாக சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என ஆய்வுகள் வெளியாகி வந்தன. அதனை நிரூபிக்கும் வகையில், கோவாவில் தற்போது பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்வது குறைந்து சொந்த வாகனங்களின் பயன்பாடு உயர்ந்துள்ளது.

அதே சமயம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, கார், பைக் ஆகிய வாகனங்களின் விற்பனை உயரும் எனவும் ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. அதற்கு ஏற்ப ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தற்போது வாகன விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. வரும் மாதங்களில் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளன.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வாகனங்கள் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. ஆனால் தற்போது அதே கொரோனா வைரஸ் காரணமாக, வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், விட்டதை பிடித்து விடும் எண்ணத்துடன் வாகன நிறுவனங்கள் உள்ளன.

கோவா மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பேருந்துகளில் பயணிக்க மக்கள் அச்சம் காட்டுகின்றனர். இதனால் பேருந்து உரிமையாளர்களுக்கு வருவாய் குறைந்துள்ள நிலையில், மறுபக்கம் டீசல் விலை உயர்வும் அவர்களை பாடாய்படுத்தி வருகிறது. எனவே அரசு உதவி செய்ய வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy: KTC


Click it and Unblock the Notifications








