கொரோனா பேயாட்டத்தால் பதறும் ஆர்டிஓ அலுவலகங்கள்... புதிய டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்!
நாட்டின் அனைத்துத்துறையும் கொரோனாவின் பேயாட்டத்தில் சிக்கி தவித்து வருகின்றது. இதில், தற்காத்து கொள்ளும்விதமாக ஒவ்வொரு துறையும் தற்காலிக இழுத்துமூடலைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனாவின் வலையில் ஆர்டிஓ அலுவலகங்கள் சிக்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா (நாவல் கோவிட்-19) வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் பல செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக, கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படும் சீனா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்த நிலை சற்றே தீவிரமடைந்து வருகின்றது. இதே நிலைதான் தற்போது இந்தியாவிலும் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியிருக்கின்றது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,475-மாக இருக்கின்றது. அதேசமயம், குணமடைவோரின் எண்ணிக்கையும் 82,812 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு, நாளுக்கு நாள் புதிய எண்ணிக்கையில் உலகை பேயாட்டத்தால் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா, தற்போது இந்தியாவிலும் சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கியிருக்கின்றது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தநிலையில் இருக்கின்றது. நேற்றைய தினம் 151 பேராக இருந்த எண்ணிக்கை இன்று (மார்ச் 19) 169ஆக உயர்ந்திருக்கின்றது. அதாவது, ஒரே நாளில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 141 பேர் இந்தியர்கள், 25 வெளிநாட்டினர் ஆவர்.

அதேசமயம், கொரானவால் இதுவரை 3 பேர் இந்தியாவில் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்துக் கொண்டு வருகின்ற காரணத்தால் நாடே முடங்கும் நிலை உருவாகியிருக்கின்றது. குறிப்பாக, கொரோனாவின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் சில தங்களின் ஊழியர்களை கொரோனாவிடம் இருந்து காப்பதற்காக ஓர்க் ஃபிரம் ஹோம் (வீட்டிலிருந்தே பணி புரிதல்) என்ற திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். இதேபோன்று, அரசுகள் சார்பிலும் மக்களைக் காப்பதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொது இடங்களில் கூடுவதை தவிர்த்தல் மற்றும் கொரோனா தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல் போன்ற விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விழிப்புணர்வின் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் இன்று இயங்க இருந்த 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாலும், பொதுமக்கள் வெளியில் தேவையின்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்பதற்காகவும் இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. இதேபோன்று தமிழக அரசும் அதன் சார்பில் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் செலுத்த அறிவுறுத்தியிருக்கின்றது. tangedco.gov.in அல்லது tneb app மூலம் மின்நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இவ்வாறு, மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களை காப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மஹாராஷ்டிரா அரசும் கொரோனா எதிரொலியாக புதிய லைசென்சுக்காக விண்ணப்பிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை ஒன்றை அம்மாநில போக்குவரத்துத்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
அதில், அதிக மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக புதிய ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் வாகன ஃபிட்னஸ் சான்று பரிசோதனை உள்ளிட்டவற்றை மார்ச் 31ம் தேதி வரை நிகழ்த்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 50 ஆர்டிஓ-க்கள் மற்றும் துணைநிலை ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வாகனம் சார்ந்த விவகாரங்களுக்காக அணுகி வருகின்றனர்.
இதுபோன்று, பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகின்றன.

இந்த கூட்டங்கள் கொரோனா பரவுவதலுக்கு மிக எளிமையாக வழி வகுக்கும் என்ற எண்ணத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஆர்டிஓ அலுவலகங்களில் மக்கள் கூடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விண்ணப்பதாரர்களை அழைப்புகள் மூலம் அப்பாயிண்மெண்ட் வழங்கி குறிப்பிட்ட சேவைகளை மட்டும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட நடவடிக்கை கொரோனாவை கட்டுபடுத்தும் விதமாக வருகின்ற 31ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும் என மஹாராஷ்டிரா அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது மஹாராஷ்டிராவில் கொரோனாவின் தொற்று அதிகம் (42 தொற்றுகள்) காணப்படுவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...
Source: ET Auto


Click it and Unblock the Notifications








