அமெரிக்கா ஆட்டம் கண்டதால் ஆத்திரம்... அடுத்த 100 நாளில் இது நடக்கும்... டிரம்ப் கட்டளை நிறைவேறுகிறது
கொரோனா வைரஸால் அமெரிக்க ஆட்டம் கண்டுள்ள நிலையில், டொனால்டு டிரம்ப்பின் கட்டளையை நிறைவேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19, சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படுகிறது. மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் தற்போது வரை 37,846 பேரின் உயிரை பறித்துள்ளது.

அதே சமயம் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 7,87,438 பேரை கோவிட்-19 வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையும் வரும் நாட்களில் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. கோவிட்-19 வைரஸ் சுவாச மண்டலத்தை தாக்குகிறது.

இதனால் உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளின் அரசுகளும், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளன. வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அரசுகளின் வேண்டுகோளை ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஏற்று கொண்டுள்ளன.

உலக வல்லரசான அமெரிக்காவே கொரோனா வைரஸால் தற்போது நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்கும்படி, ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால் வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும் விஷயத்தில், ஜென்ரல் மோட்டார்ஸ் கால தாமதம் செய்து வருவதாக டொனால்டு டிரம்ப் முதலில் ஆத்திரமாக குற்றம் சாட்டினார். இதனால் வென்டிலேட்டர்களை தயாரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் புகைப்படம் எடுத்து வெளியிட்டது.

எனவே ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை டொனால்டு டிரம்ப் வெகுவாக பாராட்டினார். டொனால்டு டிரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவுகளையடுத்து, வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதன்படி ஜிஇ (GE) நிறுவனத்துடன் இணைந்து, அடுத்த 100 நாட்களில், 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்க ஃபோர்டு நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஃபோர்டு நிறுவனம் இதனை நேற்று (மார்ச் 30) அறிவித்தது. ஜென்ரல் எலெக்ட்ரிக்கின் (General Electric) ஹெல்த்கேர் யூனிட் உடன் கூட்டாக இணைந்து, மிக்சிகனில் உள்ள தொழிற்சாலையில், அடுத்த 100 நாட்களில், 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்பின் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஒரு மாதத்திற்கு 30,000 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால் தற்போதே அமெரிக்கா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வரும் நாட்களில் பாதிப்பு இன்னும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

எனவே ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் இதர நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்கள் நியூயார்க் உள்பட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகள் மிகுந்த பாதுகாப்புடன்தான் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்துதான் பணியாற்றுவார்கள். இது தவிர கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா? என ஆலைக்குள் நுழையும் முன்பு, அவர்களுக்கு சோதனையும் செய்யப்படும். இந்தியாவை பொறுத்தவரை, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








