ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் காலி... இப்படி ஒரு ஆக்ஸன் எடுப்பாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க
விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்புலன்ஸ்கள்களுக்கு செக் வைக்கும் வகையில் அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவிட்-19 இரண்டாவது அலை விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஆம்புலன்ஸ்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், சில தனியார் ஆம்புலன்ஸ்கள் விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே ஹரியானா மாநில காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.

இதன்படி 440 கார்களை அவர்கள் தற்காலிகமாக ஆம்புலன்ஸ்களாக சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர். கோவிட்-19 நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இந்த ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபடும். இந்த வாகனங்கள் COV-HOTS என அழைக்கப்படும். Covid-19 Hospital Transport Service என்பதன் சுருக்கம்தான் COV-HOTS.

டொயோட்டா இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்துவதற்கு காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். தற்போதைய நிலையில் 126 COV-HOTS வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் 70 COV-HOTS வாகனங்கள் இன்று (மே 6) சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 244 COV-HOTS வாகனங்கள் வரும் ஞாயிற்று கிழமை மாலை சேவைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனங்கள் கோவிட்-19 நோயாளிகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாகனங்கள் தேவைப்படுபவர்கள் 108 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

அல்லது காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். வீட்டில் இருந்து மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கும் வருவதற்கு இந்த வாகனங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த வாகனங்களை ஓட்டும் நபர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கும்.

அத்துடன் அவர்கள் மாஸ்க், க்ளவுஸ் மற்றும் பிபிஇ கிட்களை அணிந்திருப்பார்கள். இதற்கிடையே விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரியானா அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில், விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்து பிடிபடும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதிக்கும்படி வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அத்துடன் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும்படியும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளுக்கு இணங்காவிட்டால், ஆம்புலன்ஸின் பதிவு சான்றிதழை ரத்து செய்யவும் அல்லது ஆம்புலன்ஸை பறிமுதல் செய்யவும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் முடியும்.


Click it and Unblock the Notifications








