மஹாராஷ்டிராவில் மிக கடுமையான சரிவு... கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அல்ல... அரசின் வருவாய்...
கொரோனா வைரஸ் பிரச்னையால், மஹாராஷ்டிராவில் ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் மிக கடுமையாக சரிந்துள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே உலுக்கி எடுத்து வருகிறது. கொரோனா வைரஸின் கோர பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதில், மஹாராஷ்டிரா மிகவும் முக்கியமானது. நாட்டிலேயே கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மஹாராஷ்டிராதான்.

மஹாராஷ்டிர மாநில தலைநகரும், இந்தியாவின் வர்த்தக தலைநகருமான மும்பை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மஹாராஷ்டிர மாநிலமே ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்துள்ள நிலையில், அங்கு புதிய வாகன பதிவுகள் மிக கடுமையாக சரிவடைந்துள்ளன.

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெறும் 27,278 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனவே இது மிகவும் கடுமையான வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 50 ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளன. இங்கு நடப்பாண்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களிலும் வெறும் 27,278 புதிய வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு இதே காலகட்டத்தில், மஹாராஷ்டிரா முழுவதும் 4,01,961 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பாக மஹாராஷ்டிரா மாநில மோட்டார் வாகன துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக வாகன பதிவு சரிந்துள்ளதுடன், வரி வருவாயும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாயை அரசாங்கம் பெருமளவில் இழக்க நேரிட்டுள்ளது' என்றார்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களிலும் மஹாராஷ்டிர ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் வெறும் 95.71 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1339.67 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய வருவாய் இழப்பை சந்தித்துள்ளதால், அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக வாகனங்களை கொண்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதன்மையான இடத்தில் உள்ளது. அங்கும் 3.75 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. வரிகள் மூலமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் 8,300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை, அரசின் வருவாயை தற்போது கடுமையாக பாதித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை, கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டவை என ஆர்டிஓ அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் ஊரடங்கு, கடன் ஒப்புதலில் தாமதம், முழுமையடையாத பேப்பர் ஒர்க் ஆகிய காரணங்களால், வாகனங்களை உடனடியாக பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த இரு மாதங்களில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், மஹாராஷ்டிராவில் வாகன பதிவு நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என நம்புவதாக ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








