கொரோனா வைரஸ் அச்சத்தால் வீடுகளில் முடங்கும் மக்கள்... இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்தது
கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் (Coronavirus) குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19, ஒட்டுமொத்த உலகிற்கே தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதவிர 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளும்படியும் அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சுவதால், போக்குவரத்து துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிறுவனங்கள்தான் பொருளாதார ரீதியில் மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில், நடப்பு மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், இந்தியாவின் எரிபொருள் தேவை 10-11 சதவீதம் குறைந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், தொழில்துறை நடவடிக்கைகள் குறைந்து போயிருப்பதாலும்தான் இந்தியாவின் எரிபொருள் தேவை இந்தளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது.

நடப்பு மார்ச் மாதத்தில், 19.5 மில்லியன் டன்கள் பெட்ரோலிய பொருட்களை மட்டுமே இந்தியா நுகர்ந்துள்ளது. இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அனைத்து பெட்ரோலிய பொருட்களின் விற்பனையிலும் கொரோனா வைரஸின் தாக்கத்தை பெட்ரோலிய தொழில் துறை கண்டுள்ளது.

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் இரு வாரங்களில், திரவ எரிபொருள்களுக்கான ஒட்டுமொத்த தேவை 10-11 சதவீதம் சரிந்துள்ளது'' என கூறப்பட்டுள்ளது. கொரோனாவைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், பயணங்கள் தொடர்பாக வழங்கப்பட்டு வரும் ஆலோசனைகள் ஆகிய காரணங்களால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது.

பொதுமக்கள் தற்போது பயணங்களை பெருமளவில் குறைத்து கொள்ள தொடங்கி விட்டனர். எனவே வாகன பயன்பாடு குறைந்துள்ளது. இதுதவிர தொழில்துறையின் நடவடிக்கைகளிலும் மந்தநிலை நிலவி வருவதால், எரிபொருள் தேவை குறைந்துள்ளது. டீசல் விற்பனையானது 13 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ள நிலையில், ஜெட் எரிபொருள் விற்பனை 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது.

அதேசமயம் பெட்ரோலின் விற்பனை 2 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (Aviation Turbine Fuel - ATF) விற்பனையானது பத்து சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. கூடிய விரைவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறினால், வரும் காலங்களில் போக்குவரத்து துறையின் நிலைமை மோசமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








