1,800 கிமீ சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா? நாட்டையே கலங்க வைத்த இளைஞர்
ஊரடங்கு உத்தரவு காரணமாக, இளைஞர் ஒருவர் 1,800 கிலோ மீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 தற்போது மனித குலத்தையே அச்சுறுத்தி கொண்டுள்ளது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசுகளே நாடுகளே திணறி வருகின்றன.

அமெரிக்கா தவிர இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகளும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் வுஹான் நகரை தாயகமாக கொண்டதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸ் ஐரோப்பிய நாடுகளைதான் மிக கடுமையாக பாதித்துள்ளது. சீனாவில் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தாலும், ஐரோப்பா மற்றும் உலகின் மற்ற நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு திடீரென பிறப்பிக்கப்பட்டதால், வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பலர் அங்கேயே சிக்கி கொண்டுள்ளனர். அவர்களால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழந்த 24 வயது இளைஞர் ஒருவர், மும்பையில் இருந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு, சைக்கிளில் பயணம் செய்துள்ளார். சைக்கிளில் அவர் கடந்த தொலைவு 1,800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம். இந்த சம்பவம் தற்போது நாட்டையே கண் கலங்க வைத்துள்ளது.

அந்த இளைஞரின் பெயர் மகேஷ் ஜெனா. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாசூர் என்ற சிறிய கிராமம்தான் மகேஷ் ஜெனாவின் சொந்த ஊர். ஆனால் மஹாரஷ்டிர மாநிலம் மும்பையில், மகேஷ் ஜெனா கொத்தனாராக வேலை செய்து வந்தார். தற்போது 24 வயதாகும் மகேஷ் ஜெனா, ஊரடங்கு அமலுக்கு வந்த சமயத்தில் மும்பையில் இருந்தார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர் வேலையை இழந்தார். இதனால் அவரால் வீட்டு வாடகையை கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என அவர் முடிவு செய்தார். மேலும் பஸ் மற்றும் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், மிதிவண்டியில் சென்று விடலாம் எனவும் மகேஷ் ஜெனா முடிவெடுத்தார்.

அவரது பயணம் கடந்த ஏப்ரல் 2ம் தேதி தொடங்கியது. பயணத்தை தொடங்கிய சமயத்தில் அவரிடம் சில நூறு ரூபாய் மட்டுமே பணம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஷ் ஜெனா ஒவ்வொரு நாளும் சுமாராக 10 முதல் 12 மணி நேரம் வரை சைக்கிள் ஓட்டுவார். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் 230 கிலோமீட்டர்களை கடந்து விடுவார்.

வழியில் மகேஷ் ஜெனா சந்தித்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சிலர், அவருக்கு உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை வழங்கி உதவி செய்துள்ளனர். எப்படியோ ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 9ம் தேதி, மகேஷ் ஜெனா தனது சொந்த ஊரை சென்றடைந்தார். சொந்த ஊர் வந்த பிறகு, மகேஷ் ஜெனா அந்த மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு, அவர்கள் தற்போது இருக்கும் அந்தந்த மாநிலங்களின் அரசுகள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








