செம ட்ரிக்ஸ்... 3 லட்ச ரூபாய் செலவு செய்து சொந்த ஊர் வந்த மனிதர்... எப்படினு தெரிஞ்சா அசந்திருவீங்க
விமான நிலைய ஊழியர் ஒருவர் 3 லட்ச ரூபாய் செலவு செய்து, லாரியில் சொந்த ஊர் வந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது முடக்கி போட்டுள்ளது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கோவிட்-19 வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பெரும்பாலான நாடுகளில் தற்போது ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக, பஸ், ரயில், விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. டாக்ஸிகளும் இயக்கப்படுவதில்லை. மக்களும் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பணியாற்றி வரும் பலர் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தற்போது வேறு வழியில்லை. இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டியதுதான். எனினும் ஒரு சிலர் சொந்த ஊர் திரும்புவதற்காக, சைக்கிள், பைக்குகளில் நீண்ட தூரம் பயணித்து வருகின்றனர்.

இப்படி பலர் ரிஸ்க் எடுத்து பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் நகரை சேர்ந்த ஒருவர் மிகவும் நூதனமான முறையை பின்பற்றி சொந்த ஊர் வந்திருக்கிறார். இந்த சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரேம் மூர்த்தி பாண்டே என்பவர்தான் வித்தியாசமான முறையை பின்பற்றி தனது சொந்த ஊர் சென்று சேர்ந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தான் இவரது சொந்த ஊர். ஆனால் மும்பை விமான நிலையத்தில் இவர் பணியாற்றி வருகிறார். விமான நிலையத்தில் பணியாற்றி காரணத்தால், போக்குவரத்து அமைப்புகள் எப்படி இயங்குகின்றன? என்பது பிரேம் குமார் பாண்டேவிற்கு நன்றாக தெரியும். பயணிகள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அவர் அறிந்து வைத்திருந்தார்.

அதே சமயம் அத்தியாவசிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்பதும் பிரேம் மூர்த்தி பாண்டேவிற்கு தெரியும். எனவே வெங்காய வியாபாரி வேடம் தரித்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விடுவது என பிரேம் மூர்த்தி பாண்டே முடிவு செய்தார்.

அத்தியாவசிய பொருட்களை பிரச்னை இல்லாமல் எடுத்து செல்வது எப்படி? மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வதற்காக, முதலில் மினி டிரக் ஒன்றை பிரேம் மூர்த்தி பாண்டே வாடகைக்கு எடுத்தார். இதன்பின் நாசிக் அருகே உள்ள பிம்பல்கானில் இருந்து மும்பைக்கு, அந்த மினி டிரக்கில், தர்பூசணி பழங்களை அவர் கொண்டு வந்தார்.

இந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததால், அடுத்தபடியாக உத்தர பிரதேசம் செல்ல தனது முக்கிய திட்டத்தை பிரேம் மூர்த்தி பாண்டே செயல்படுத்த தொடங்கினார். இதன்படி பிம்பல்கான் மார்க்கெட்டில், சுமார் 25.5 டன் வெங்காயத்தை பிரேம் மூர்த்தி பாண்டே வாங்கினார். இதற்காக தோராயமாக 2.32 லட்ச ரூபாயை அவர் செலவிட்டார்.

இதன்பின் பிம்பல்கானில் இருந்து அந்த வெங்காயத்தை உத்தர பிரதேச மாநிலத்திற்கு கொண்டு செல்ல லாரி ஒன்றை வாடகைக்கு எடுத்தார். லாரியின் வாடகை மட்டும் 77,500 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேம் மூர்த்தி பாண்டேவின் திட்டம் இதன்பின் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியது. வழியில் அவர் எந்தவித பிரச்னைகளையும் எதிர்கொள்ளவில்லை.

ஆனால் அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதால், உத்தரபிரதேசம் சென்றதும், வெங்காயத்தை விற்பதற்கு முன்டேரா மார்க்கெட்டிற்கு அவர் சென்றார். எனினும் வெங்காயம் அதிகமாக இருந்ததால், அதனை வாங்கி கொள்ள யாரும் முன்வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பிரேம் மூர்த்தி பாண்டே வெங்காயத்துடன் தனது சொந்த கிராமமான கோட்வா முபார்க்பூருக்கு சென்றார்.

பிரேம் மூர்த்தி பாண்டேவின் இந்த திட்டம் குறித்த தகவல்கள், எப்படியோ அதிகாரிகள் காதுகளுக்கு சென்று விட்டது. எனவே அவர்கள் பிரேம் மூர்த்தி பாண்டேவிற்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்ளும்படி அதிகாரிகள் அவருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் வரும் நாட்களில் வெங்காயத்தை விற்பனை செய்து, முதலீடு செய்த பணத்தை மீட்டு விட முடியும் என்ற நம்பிக்கையில் பிரேம் மூர்த்தி பாண்டே இருக்கிறார். இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்து, எப்படியாவது சொந்த ஊர் சென்று விட வேண்டும் என பிரேம் மூர்த்தி பாண்டேவை தூண்டியது எது? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

கொரோனா வைரஸ் அச்சம்தான் அதற்கு காரணம் என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக மும்பை நகரம் மாறி வருகிறது. மும்பையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படிப்பட்ட சூழலில், மிகவும் நெருக்கடியான பகுதியில் பிரேம் மூர்த்தி பாண்டே வசித்து வந்தார்.

எனவே தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என பிரேம் மூர்த்தி பாண்டே அஞ்சினார். எனவே எப்படியாவது சொந்த ஊர் சென்று விட வேண்டும் என அவர் முடிவு செய்தார். அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் பயணிப்பதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி. இதனால்தான் மூன்று லட்ச ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்து, 1,400 கிலோ மீட்டர் கடந்து, அவர் சொந்த ஊர் சென்று சேர்ந்துள்ளார்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








