உடல்நிலை மோசமான தாய் சொன்ன அந்த ஒரு வார்த்தை... மதுரையில் இருந்து தேனிக்கு சைக்கிள் மிதித்த இளைஞர்
உடல்நிலை மோசமான தாய் சொன்ன ஒரு வார்த்தைக்காக, மதுரையில் இருந்து தேனிக்கு, இளைஞர் ஒருவர் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் தமிழகத்தையே நெகிழ வைத்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) காட்டுத்தீ போல பரவி வருகிறது. கோவிட்-19 வைரஸை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது? என்பது தெரியாமல், உலக நாடுகள் திணறி வருகின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கே இந்த நிலைமைதான். கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது.

அமெரிக்கா தவிர, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளும் கோவிட்-19 வைரஸின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ளன. கோவிட்-19 வைரஸின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேவை இல்லாமல் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்திய சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. பேருந்து சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றிருந்தவர்கள் ஆங்காங்கே சிக்கி கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

பேருந்து சேவைகள் இல்லாததால், இளைஞர் ஒருவர் மதுரையில் இருந்து தேனிக்கு சைக்கிளிலேயே பயணம் செய்துள்ளார். கிட்டத்தட்ட 85 கிலோ மீட்டர் தூரம் அவர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார். அதுவும் பழுதான சைக்கிளில் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால், தேவையில்லாமல் யாரும் வெளியே வர கூடாது என காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆனால் வீட்டிற்கு உள்ளேயே இருக்க ''போர்'' அடிக்கிறது எனக்கூறி கொண்டு, கோவிட்-19 வைரஸின் தீவிரம் புரியாமல், ஒரு சில இளைஞர்கள் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களில் வெளியே ஜாலியாக சுற்றி கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு மத்தியில், பழுதான சைக்கிளில் 85 கிலோ மீட்டர்கள் பயணித்துள்ள இந்த இளைஞரின் கதை நம் மனதை நெகிழ வைக்கிறது.

மதுரை கூடல்நகரை சேர்ந்தவர்கள் முத்து-தமிழ்செல்வி. இவர்களுக்கு ஜீவராஜ் என்ற மகனும், பிரவீனா என்ற மகளும் உள்ளனர். இதில், ஜீவராஜுக்கு 22 வயதாகிறது. பிரவீனாவிற்கு 20 வயதாகிறது. முத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். எனவே தமிழ்செல்விதான் தனது பிள்ளைகளை கவனித்து வருகிறார்.

தனியார் பள்ளி ஒன்றில் அவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அதே சமயம் பிரவீனா நர்சிங் முடித்து விட்டு, தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்த சூழலில், தமிழ்செல்விக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே பிரவீனாவை அழைத்து வரும்படி தனது மகன் ஜீவராஜிடம் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பேருந்து சேவை இல்லாததால், என்ன செய்வது? என தெரியாமல் அவர் குழம்பி போனார். எனினும் சைக்கிளிலேயே சென்று தங்கையை அழைத்து வருவது என்ற முடிவை அவர் எடுத்தார். முடிவு எடுத்தவுடன் தாமதம் செய்யாமல், உடனடியாக தேனியை நோக்கி புறப்பட்டு விட்டார். டியூப் பழுதாக இருந்த காரணத்தால், காற்று அடிக்கும் பம்ப்பை மட்டும் கேரியரில் வைத்து எடுத்து சென்றார்.

மதுரையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட ஜீவராஜ், 85 கிலோ மீட்டர் தொலைவை கடந்து, பிரவீனா வேலை செய்யும் மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் (ஏப்ரல் 20ம் தேதி) இரவு வந்தார். தங்கையை அழைத்து செல்வதற்கு ஜீவராஜ் சைக்கிளில் வந்திருக்கும் செய்தியை கேட்டு, மருத்துவமனை நிர்வாகமும், அங்கு பணியாற்றுபவர்களும் நெகிழ்ந்து போனார்கள்.

ஆனால் சைக்கிளில் அவர்கள் இருவரும் மீண்டும் மதுரை செல்ல வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அண்ணனும், தங்கையும் மதுரை செல்வதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் கார் ஏற்பாடு செய்தனர். அதில் அவர்கள் இருவரும் புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து ஜீவராஜ் கூறுகையில், ''நான் பயணித்த சைக்கிளில் இரண்டு டயர்களும் பழுதாகி மோசமான கண்டிஷனில் இருந்தது. ஒரு கிலோ மீட்டர் சென்றால், உடனே காற்று இறங்கி விடும். எனவே மீண்டும் காற்று அடித்து விட்டு புறப்படுவேன். மதுரையில் இருந்து நான் காலையில் புறப்பட்டேன். ஆனால் தேனி சென்று சேர்வதற்குள் இரவாகி விட்டது.

அதன்பின் எனது தங்கையை பார்க்க வந்திருக்கும் விஷயத்தை ஹாஸ்பிட்டல் பாதுகாவலரிடம் கூறினேன். ஆனால் மறுநாள் காலையில்தான் அவரை பார்க்க முடியும் என செக்யூரிட்டி கூறினார். எனவே என்ன செய்வது? என தெரியாமல் இருந்த நான், ஹாஸ்பிட்டல் முன்பாக இருந்த நிழற்குடையில் படுத்து உறங்கினேன்'' என்றார்.

மறுநாள் விடிந்ததும் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஜீவராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதன்பின் அவர்கள் மதுரைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஊரடங்கிற்கு மத்தியிலும், தங்கையை அழைத்து செல்வற்காக, சுமார் 85 கிலோ மீட்டர்கள் தூரம் அண்ணன் சைக்கிளில் வந்த சம்பவம் தமிழக மக்களின் மனங்களை நெகிழ வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








