பாக்கவே பாவமா இருக்கு... வாகன ஓட்டிகளை கண்மூடித்தனமாக தாக்கிய போலீசார்... வேற ஒன்னும் பண்ணிருக்காங்க
வாகன ஓட்டிகளை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) நம்மை விட்டு விலகுவதாக இல்லை. நம்முடன் இன்னும் நீண்ட நாட்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கும் எனவும், எனவே நாம் அதற்கு ஏற்ப வாழ பழகி கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த எச்சரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் மே 3 மற்றும் மே 17ம் தேதி வரை என ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றது. இதன்படி நேற்றுடன் (மே 17) ஊரடங்கு முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராததால் மீண்டும் ஒரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் இருப்பதால், தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி வாகனங்களில் ஜாலியாக ஊர் சுற்றுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. அத்துடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஊரடங்கை மீறியதாக தற்போது லட்சக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர வாகன ஓட்டிகளை போலீசார் தாக்கவும் செய்கின்றனர். ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் மிகவும் அவசியம்தான் என்றாலும், சில சமயங்களில் காவல் துறையில் எல்லை மீறி நடந்து கொள்கின்றனரோ? என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில் வாகன ஓட்டிகளை போலீசார் தாக்கும் பல வீடியோக்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

அந்த வீடியோக்களை பார்க்கும்போதே மனது பதறுகிறது. இந்த வகையில் தற்போது மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளை போலீசார் மிகவும் கடுமையாக தாக்குவதையும், அத்துடன் நிற்காமல் ஹோண்டா டியோ உள்ளிட்ட ஸ்கூட்டர்களை அடித்து நொறுக்குவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த சம்பவம் எங்கு நடந்தது? என்பது பற்றிய சரியான தகவல் கிடைக்கவில்லை. எனினும் கர்நாடகாவின் ஏதேனும் ஒரு பகுதியில் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஹோண்டா டியோ ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளைஞர்களை காவல் துறை அதிகாரி ஒருவர் தாக்குவதை நம்மால் இந்த வீடியோவில் காண முடிகிறது. இதன்பின் அவர் ஸ்கூட்டரையும் சேதப்படுத்துகிறார்.

ஹெட்லேம்ப்ஸ், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்கூட்டரின் மற்ற பாகங்களையும் அந்த காவல் துறை அதிகாரி சேதப்படுத்துவதை பார்க்க முடிகிறது. அந்த இளைஞர்கள் கெஞ்சி கேட்டும் அவர் விடுவது போல தெரியவில்லை. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது இதற்காக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஏற்கனவே கூறியபடி ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களை போலீசார் தாக்கிய சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. இதில், எல்லை மீறி நடந்து கொண்ட ஒரு சில போலீசார் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் வாகனங்களை போலீசார் சேதப்படுத்துவதும் இது முதல் முறை கிடையாது. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பே, வாகனங்களை போலீசார் சேதப்படுத்திய சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன.

குடிமக்கள் மீது விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு காவல் துறையினருக்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கவே செய்கின்றன. அதில் சந்தேகமில்லை. ஆனால் வாகனங்கள் போன்ற ஒருவரின் தனிப்பட்ட உடைமைகளை சேதப்படுத்துவது என்பது சரியான நடவடிக்கையாக தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு சிக்கல் ஏற்படலாம்.

எனினும் இந்தியாவை பொறுத்தவரை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக பெரும்பாலும் புகார் பதிவு செய்யப்படுவதில்லை. ஸ்கூட்டர்களை போலீசார் சேதப்படுத்தும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இந்த வீடியோவில், வேறு சில இடங்களில் மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் நிகழ்வுகளும் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் சில நாட்கள், வாகன ஓட்டிகள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை நம்மால் பார்க்க முடிந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதன்பின் போலீசார் தங்கள் போக்கை மாற்றி கொண்டனர். தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு, கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தேர்வு நடத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இருந்தபோதும் நாட்டில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகளை போலீசார் தாக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டேதான் உள்ளன. அதே சமயம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி பொதுமக்களின் பயணங்களுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கும் மத்திய, மாநில அரசுகள் ஆயத்தமாகி வருகின்றன. நாட்டின் ஒரு சில பகுதிகளில் டாக்ஸிகள் ஏற்கனவே இயங்க தொடங்கி விட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








